/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சரக்கு வாகனத்தில் பிரசாரம் செய்தால் பறிமுதல்: எஸ்.பி.,சரக்கு வாகனத்தில் பிரசாரம் செய்தால் பறிமுதல்: எஸ்.பி.,
சரக்கு வாகனத்தில் பிரசாரம் செய்தால் பறிமுதல்: எஸ்.பி.,
சரக்கு வாகனத்தில் பிரசாரம் செய்தால் பறிமுதல்: எஸ்.பி.,
சரக்கு வாகனத்தில் பிரசாரம் செய்தால் பறிமுதல்: எஸ்.பி.,
ADDED : அக் 08, 2011 12:14 AM
துடியலூர் : ''உள்ளாட்சி தேர்தலின்போது சரக்கு வாகனத்தில், தேர்தல் பிரசாரம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்'' என,போலீஸ் எஸ்.பி., உமா பேசினார்.பெரியநாயக்கன்பாளையம், பேரூர் சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் துடியலூரில் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் சப்-டிவிஷன் டி.எஸ்.பி., சக்திவேல், பேரூர் டி.எஸ்.பி., சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், கோவை மாவட்ட எஸ்.பி., உமா பேசியதாவது:ஓட்டுச்சாவடிக்குள் செல்ல தேர்தல் அதிகாரியை தவிர யாருக்கும் அனுமதியில்லை. சரக்கு வாகனத்தில் பிரசாரம் செய்யக் கூடாது. ஜீப் போன்ற வாகனத்தில் பிரசாரம் செய்ய உரிய அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி இலவச பரிசுப் பொருட்களையோ, மது மற்றும் பிரியாணி உள்ளிட்டவை வழங்க, விருந்து போன்ற உபச்சாரம் நடத்த அனுமதி இல்லை. இது தொடர்பாக அடிக்கடி சோதனை நடத்த வருவாய் துறையினர் சார்பில் நான்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் துறையிலும் சிறப்புப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர். தகவல் கொடுத்தவுடன் அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் சம்பவ இடத்தை அடைந்து நடவடிக்கை மேற்கொள்வர், என்றார்.பெ.நா.பாளையம் சப்- டிவிஷன் டி.எஸ்.பி. சக்திவேல் பேசியதாவது:சுவர் விளம்பரத்தை வீட்டின் உரிமையாளர், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற்று செய்யலாம். அது வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அரசு சுவர்களில் எழுதக் கூடாது. வாகனத்தில் தேர்தல் விதிமுறைக்குட்பட்டு 'பிளக்ஸ், மைக்' பொருத்தி பிரசாரம் மேற்கொள்ளலாம். மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன் பின், 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிக்குள், மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் வரக்கூடாது. மீறி வந்து பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் ஓட்டுச்சாவடிக்குள் நுழையக்கூடாது. ஆனால், கள்ளஓட்டு போட முயன்றதாக தேர்தல் அதிகாரி யாரேனும் புகார் கொடுத்தால் குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார், என்றார்.


