Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உயர் கல்வித்துறை மேம்படுத்த நிதி

உயர் கல்வித்துறை மேம்படுத்த நிதி

உயர் கல்வித்துறை மேம்படுத்த நிதி

உயர் கல்வித்துறை மேம்படுத்த நிதி

ADDED : செப் 08, 2011 05:18 PM


Google News
Latest Tamil News

கோவை: 'உயர் கல்வித்துறையை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் செயல்படுத்தவும், அதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும் முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்,'' என, மாநில திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி தெரிவித்தார்.

மாநில திட்டக்குழு சார்பில் 2011 முதல் 2017ம் ஆண்டு வரையிலான, உயர்கல்வித்துறையின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம், பாரதியார் பல்கலை வளாகத்தில் நடந்தது. மாநில அளவில் மண்டலம் வாரியாக நடக்கும் இந்த கூட்டம், முதலாவதாக கோவையில் நடந்தது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வரவேற்றார். மாநில திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசியதாவது: சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா முறையே நான்காவது இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்தம் மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர் மட்டுமே தற்போது உயர் கல்வி கற்கின்றனர். இதை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். நாடு முழுவதும் தற்போது 1,500 பல்கலைகள் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை சதவீதம் 16 சதவீதமாக உள்ளது; இதை 25 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள் ளது. திறமைவாய்ந்த ஊழியர்கள் பற்றாக்குறையை கட்டுப்படுத்த, தேசிய திறன்மேம்பாடு நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், கடந்த 15 ஆண்டுகளில் உயர்கல்வி முடித்து தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஐ.டி., துறை உள்பட பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவுடன் மாணவ, மாணவியர் அதிக சம்பளம் பெற பல்வேறு துறைகள் தற்போது உள்ளதே இதற்கு காரணம். மாணவ, மாணவியர் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து பேராசிரியர்கள் வகுப்புக்கு செல்லும் முன் தங்களை தயார் செய்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட வேண்டும். நம் கல்வி முறையால் மாணவ, மாணவியரின் அறிவை மட்டுமே வளர்க்கிறோம். திறமையை வளர்ப்பதில்லை. உயர்கல்வித்துறையை மேம்படுத்த பல புதிய திட்டங்களும் அதிக நிதி ஒதுக்கீடும் செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மாநிலத்தில் தற்போது உயர் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் பல தரமற்று உள்ளது வருத்தமளிக்கிறது. நம் நாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினாலும், சமுதாய முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளோம். சமதாய முன்னேற்றத்துடன் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கினால் மட்டுமே நம் நாடு சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

சென்னை, அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் தங்கராஜ், கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டிய செய்திகள் குறித்து பேசுகையில் ''1950-51 ஆண்டுகளில் நாட்டில் மொத்தம் 28 பல்கலைகள் மற்றும் 578 கல்லூரிகள் செயல்பட்டன. 2009-10ம் ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பல்கலைகள் மற்றும் 25 ஆயிரத்து 951 கல்லூரிகள் செயல்பட்டன. நாட்டில் படித்தவர்கள் சதவீதம் 1921ல் 7.20 சதவீதமாக இருந்தது 2001ல் 65.38 சதவீதமாக உயர்ந்தது. தமிழகத்தில் 1921ல் 10.4 மற்றும் 2001ல் 73.47 சதவீதமாக இருந்தது. ஆண்டுதோறும் உயர்கல்வி கற்கும் ஒவ்வொரு <மாணவருக்கும் தலா 10,258 ரூபாய் செலவிடப்படுகிறது,'' என்றார்.

கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன், அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலை முன்னாள் வேந்தர் குழந்தைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us