டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது
டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது
டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது
ADDED : செப் 16, 2011 12:16 AM

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர் என நம்பப்படும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், நேற்று கைது செய்தனர். அவர்கள் ஹூஜி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த 7ம் தேதி, டில்லி ஐகோர்ட் வாசல் அருகே, சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில், 14 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் நிகழும் என, டில்லி போலீசாருக்கு பல்வேறு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. ஒரு மெயிலில், ஆமதாபாத்தில் குண்டு வெடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் இ-மெயில்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் பகுதியைச் சேர்ந்த சாரிக் அகமது, அபித் அகமது என்ற இரண்டு பள்ளி மாணவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, அமீர் அப்பாஸ், ஹிலால் அமின் என்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை, நேற்று கைது செய்தனர். மிரட்டல் இ-மெயில் அனுப்பிய விவகாரத்தில், மூளையாகச் செயல்பட்டது இவர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், தெரிய வந்துள்ள விவரம் வருமாறு: டில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும், செய்தி நிறுவனங்களுக்கு, பயங்கரவாத அமைப்புகளின் பெயரில், இ-மெயில் ஒன்றை அனுப்ப, அமீர் அப்பாஸ் திட்டமிட்டுள்ளான். இந்த மெயிலை, பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் தயார் செய்து, அதை கம்ப்யூட்டர் டிஸ்க்கில் காப்பி செய்து, தனக்குத் தெரிந்த உள்ளூர்வாசிகள் இருவரிடம் கொடுத்து, 4ம் தேதி செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளான். இந்த இ-மெயிலை தயார் செய்ய, அப்பாசுக்கு ஹிலால் அமின் உதவியுள்ளான். இவ்வாறு, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், குண்டுவெடிப்புக்குக் காரணமாக சதிகாரர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும், குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து எங்கிருந்து வாங்கப்பட்டது, டில்லி ஐகோர்ட்டிற்கு வெளியே குண்டை கொண்டு வந்து வைத்தது யார்? என்பதை தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மேலும், கைதான இருவரில் ஒருவனான அப்பாசின் மாமா, கடந்த 2008ம் ஆண்டில் நடந்த வன்முறையின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.
அதன் பின்னரே, பயங்கரவாத அமைப்புகளுக்கும், அப்பாசுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரின் கைது மூலம், குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு : டில்லி ஐகோர்ட் வளாக குண்டுவெடிப்பில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், நேற்று இறந்தார். இதையடுத்து, குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 14 ஆக அதிகரித்துள்ளது. மிர்துளா பக்ஷி என்ற அவர், உடல் முழுவதும் குண்டுக் காயம் அடைந்த நிலையில், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகையில், 'பக்ஷி, மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, சுய நினைவற்ற நிலையில் இருந்தார். அவரது தலையில், பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. கை, கால், மார்பு உள்ளிட்ட, உடலின் அனைத்துப் பகுதிகளிலும் காயங்கள் இருந்தன. நேற்று காலை அவர் உயிரிழந்தார்' என்றார்.


