/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம் : பயிற்சியாளர் இல்லாததால் வீரர்கள் விரக்திபராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம் : பயிற்சியாளர் இல்லாததால் வீரர்கள் விரக்தி
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம் : பயிற்சியாளர் இல்லாததால் வீரர்கள் விரக்தி
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம் : பயிற்சியாளர் இல்லாததால் வீரர்கள் விரக்தி
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம் : பயிற்சியாளர் இல்லாததால் வீரர்கள் விரக்தி
ADDED : ஆக 11, 2011 01:06 AM
சிவகங்கை : சிவகங்கையில் பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி உள்ளது.
போதிய பயிற்சியாளர்கள் இல்லாததாலும் வீரர்கள் ஆர்வமின்றி உள்ளனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம் 2 கோடியே 54 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 5ல் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், இறகுபந்து, வாலிபால், கூடைப்பந்து, நீச்சல் உள்ளிட்டவை நடத்த தனித்தனி வசதிகள் செய்யப்பட்டது. குளறுபடி மைதானம்: கால்பந்து மைதானம் அமைக்க தனியாரிடம் டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவடையாத நிலையில் கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இதே போல் இறகுபந்து மைதானத்திலும் விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை இருந்தது. மீண்டும் மைதானத்தை மாற்றி அமைத்து ஒரு மாதத்திற்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது. பயிற்சியாளர்கள் பற்றாக்குறை: இறகுபந்து, கால்பந்து, நீச்சல் உள்ளிட்டவைகளுக்கு மைதானம் துவங்கப்பட்ட போது பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கூடைப்பந்து, ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒரு உதவியாளர் (மார்க்கர்) நியமிக்க வேண்டும். ஆனால் அனைத்து விளையாட்டிற்கும் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே உள்ளார்.
இது தவிர அடிப்படை பணிகள் செய்ய பணியாளர்கள் இல்லாததால் மைதானத்தில் புல் வளர்ந்து காணப்படுகிறது.
ஆர்வம் இல்லை: சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாநில அளவிலும்,தேசிய அளவிலும் வீரர்கள் பங்கேற்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் இதுவரை தேசிய அளவிலான போட்டியில் யாரும் பங்கேற்கவில்லை. பள்ளிகளுக்கிடையே நடைபெறும் விளையாட்டுக்களை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிக்க தேவையான பயிற்சியாளர்களை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்து, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


