மோகன்லால், மம்முட்டி வீடுகளில் ரெய்டு
மோகன்லால், மம்முட்டி வீடுகளில் ரெய்டு
மோகன்லால், மம்முட்டி வீடுகளில் ரெய்டு
UPDATED : ஆக 14, 2011 03:39 AM
ADDED : ஆக 12, 2011 11:30 PM

கொச்சி:நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரது வீடுகளில், வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில், மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட பழங்காலப் பொருட்களின் மதிப்பு குறித்து அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் மலையாளம், தமிழ் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கு திருவனந்தபுரம், கொச்சி, சென்னை உட்பட பல இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் என பல சொத்துக்கள் உள்ளன.இவரைப் போலவே, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மம்முட்டி. இவர், கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவ்விரு பிரபல நடிகர்களும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடந்த 22ம் தேதி காலை 6.30 மணிக்கு, சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள இவ்விரு நடிகர்களது வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தினர்.இவ்விரு நடிகர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து, அவர்கள் இருவரும் கணக்கில் கொண்டு வராத, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இரண்டு கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளும், பணமும் இதில் அடக்கம்.வெளிநாடுகளில் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களில் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பதும், வங்கிக் கணக்கில் காட்டாமல் பல்வேறு முதலீடுகள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். வருமானத்திற்கேற்ப வரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தால் அபராதம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.


