ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : மதுரையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, தற்கொலையில் முடிந்ததால், இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை ஆனையூர் தமிழ்நகரைச் சேர்ந்த முகமதுகாசிம் மகன் முகமது அல்தாப், 14. தத்தனேரி திரு.வி.க., மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். சில நாட்களுக்கு முன் மாணவர்கள் சிலர் அல்தாப்பை தாக்கினர். அல்தாப்பும் அவர்களை தாக்கினார். வீடு திரும்பியதும், பெற்றோர் தலைமை ஆசிரியை ஆதிலட்சுமியிடம் கூறினர். அவர் பெற்றோரிடம் விபரம் கூறி திட்டியுள்ளார். வீடுதிரும்பிய முகமதுஅல்தாப், தூக்கில் தொங்கினார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். இதையறிந்த உறவினர்கள், தலைமை ஆசிரியை மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய கூறி, உடலை வாங்க மறுத்து, மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். கம்பை சுழற்றி கூட்டத்தை கலைத்த போலீசார் 15 பேரை வேனில் ஏற்றினர். பின் ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி., குமார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.


