Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரிமினல்கள் - போலீஸ் கூட்டணி ரகசியங்கள் விற்பனைக்கு :"கிரைம் பிராஞ்ச்'சில் "புது பிசினஸ்'

கிரிமினல்கள் - போலீஸ் கூட்டணி ரகசியங்கள் விற்பனைக்கு :"கிரைம் பிராஞ்ச்'சில் "புது பிசினஸ்'

கிரிமினல்கள் - போலீஸ் கூட்டணி ரகசியங்கள் விற்பனைக்கு :"கிரைம் பிராஞ்ச்'சில் "புது பிசினஸ்'

கிரிமினல்கள் - போலீஸ் கூட்டணி ரகசியங்கள் விற்பனைக்கு :"கிரைம் பிராஞ்ச்'சில் "புது பிசினஸ்'

ADDED : அக் 05, 2011 02:12 AM


Google News
கோவை : கோவை மாநகர போலீஸ் 'சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் (சிசிபி)' பிரிவில் பணியாற்றும் போலீசாரில் சிலர், வழக்கு விசாரணை தொடர் பான ரகசியங்களை, கிரிமினல்கள் மற்றும் மோசடி நபர்களுக்கு விற்று பணம் பெற்றுள்ளதாக, 'திடுக்' தகவல்கள் வெளியாகியுள்ளன; இதுகுறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

கோவை மாநகர போலீஸ் 'சிசிபி' அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. பெரிய அளவிலான நிதி மோசடி, நம்பிக்கை மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்கள் தொடர்பான புகார்களை இப்பிரிவு விசாரிக்கிறது. மோசடி நபர்களால் பாதிக்கப்பட்டோரால் போலீஸ் கமிஷனரிடம் அளிக்கப்படும் புகார்கள், சட்ட ரீதியான நடவடிக்கைக்காக 'சிசிபி'க்கு பரிந்துரைக்கப்படுகிறது. வழக்குப்பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளதா என, சட்ட ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றபின், 'சிசிபி' பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக, நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்கும் பொறுப்பும் இப்போலீசார் வசமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.'ரகசியம்' விற்பனை: 'சிசிபி' உதவிக் கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் முறைகேடு புகார்களுக்கு இடமளிக்காதவர்கள் என்ற நற்பெயர் போலீஸ் மத்தியில் உண்டு. அதேவேளையில், எஸ்.ஐ., உள்ளிட்ட சில போலீசார் மீது பண முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. சட்ட ரீதியான விசாரணைக்காக கமிஷனர் பரிந்துரைக்கும் புகார் மனுவில் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு ரகசிய தகவல்களை தெரிவித்து பணம் பெறுவதாகவும், தேடல் நடவடிக்கை குறித்த தகவலை தலைமறைவு குற்றவாளிகளுக்கு தெரிவித்து உஷார் படுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், நில அபகரிப்பு தொடர்பாக தி.மு.க.,வினர் சிலர் மீது வழக்குப் பதிவு செய்த 'சிசிபி' போலீசார், முக்கிய பிரமுகரை கைது செய்ய திட்டமிட்டனர். அந்நபர் காந்திபுரம் அருகே காரில் கட்சி ஆபீஸ் நோக்கிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க போலீஸ் குழுவை கட்சி ஆபீசை கண்காணிக்க அனுப்பினர். அதேநேரத்தில், கட்சி ஆபீஸ் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த தி.மு.க. பிரமுகர், திடீரென காரை திருப்பிச் சென்று மாயமானார்; கைது வலையில் இருந்தும் தப்பினார். அவருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்து தப்பியோட உதவியதே 'சிசிபி' யில் பணியாற்றும் சில போலீசார்தான் என்றும், தகவலுக்கு கூலியாக 3.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதேபோன்று, மேலும் சில வழக்கு விசாரணைகளின் போதும் தி.மு.க., பிரமுகர்கள் மற்றும் மோசடி நபர்களுக்கு தகவல் தெரிவித்து போலீசார் கூலி பெற்றதாக கூறப்படுகிறது. கோவை நகரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் புரமோட்டர் ஒருவர் மீது போலீஸ் கமிஷனரிடம் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டு,'சிசிபி' விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இப்புகார் குறித்து போலீசாரில் சிலர், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவித்துள்ளார். புகார் அளித்துள்ள நபர்களுடன் பேச்சு நடத்தி 'வெளியில்' பிரச்னையை 'செட்'டில் செய்து கொள்ளுமாறும் உஷார் படுத்தியுள்ளனர். தவிர 'மாஜி' அமைச்சர் மற்றும் லாட்டரி அதிபரின் ஏஜன்ட்களுடன் தொடர்பு வைத்து, வழக்கு விசாரணை குறித்த தகவல்களை காசுக்கு விற்றுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 'சிசிபி' போலீசாரில் சிலர் மீதான புகார்கள் குறித்து உதவிக்கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது, 'தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us