Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

UPDATED : செப் 28, 2011 07:28 AMADDED : செப் 27, 2011 11:40 PM


Google News
தர்மபுரி: உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள நிலையில், பெரும்பாலான பெண் தலைவர்கள் பின்னணியில் அவர்களது கணவர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களில், பெண் வேட்பாளரின் கணவர்களின் ஃபோட்டோக்கள் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. எல்லாத்துறையில் பெண்கள் முன்னேறி வரும் நிலையில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு முறை உள்ளாட்சி பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில், 50 சதவீதம் பெண்கள் இருப்பதால், உள்ளாட்சி தேர்தல்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு பொறுப்புக்குள் வந்துள்ள பெண் உள்ளாட்சி பதவிகளின் உள்ளவர்களின் பின்னணியில் அவர்களது கணவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பல பஞ்சாயத்துக்களில் பெண்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் கையெழுத்து மட்டுமே போடும் நிலையுள்ளது. பெண்கள் தலைவியாக உள்ள பஞ்சாயத்துக்களில் அனைத்தும் தலைவியின் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஆதிக்கம் அதிகம் உள்ளது. ஒரு சில பெண் தலைவர்கள் மட்டுமே துணிந்து முடிவு எடுப்பதும், பஞ்சாயத்தை வழி நடத்துவதிலும் சிறப்பாக பணிபுரிகின்றனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு மொத்தம், 40 சதவீதம், 75 பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்கள், 31ல் பெண்களுக்கு, 11 பதவிகள். இது, 35 சதவீதமாகும். ஆதிதிராவிட பெண்களுக்கு ஏழு பதவிகள் இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 385 யூனியன் சேர்மன் பதவிகளில், 140 பெண்களுக்கும், (36 சதவீதம்) இதில், 87 ஆதிதிராவிடருக்கும், 4 பழங்குடியினருக்கும், 12 ஆயிரத்து, 524 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவியில், 4, 289 பெண்களுக்கும் (34 சதவீதம்) இதில், 3, 136 ஆதிதிராவிடருக்கும், 156 பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 655 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், 228 பெண்களுக்கு (35 சதவீதம்) இதில், 154 ஆதிதிராவிடருக்கும், எட்டு பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர், 6, 471 பதவிகளில், 2, 286 பதவிகள் பெண்களுக்கு (35 சதவீதம்) இதில்,1,526 ஆதிதிரவிடருக்கும், 64 பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள மொத்தம், 99 ஆயிரத்து, 333 வார்டு உறுப்பினர் பதவியில், 33 ஆயிரத்து, 121 பெண்களுக்கு (33 சதவீதம்) இதில், 25 ஆயிரத்து, 360 ஆதிதிராவிடருக்கும், 1,039 பதவிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற கோஷம் ஒரு பக்கம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது, தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான பெண் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களில் கூட, அவர்களது கணவரின் ஃபோட்டோவுடன் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் வெற்றிக்கு பின் பொறுப்புக்கு வரும் பெண்களின் பின்னணியில் அவர்களது கணவர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதைத்தான் இது காட்டுகிறது. பெண்களுக்கு அதிக வாய்ப்புள்ள உள்ளாட்சி நிர்வாகத்தில் தனித்தன்மையுடன் செயலபடும் வகையில் பெண்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வரும் பெண்கள் தங்கள் கணவர்களின் தலையீடு இல்லாமல் தனித்தன்மையுடனும், சுதந்திரமாகவும் நிர்வாக பணிகளை கவனிக்கும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us