Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்

வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்

வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்

வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்

ADDED : ஜூலை 24, 2011 01:09 AM


Google News

தர்மபுரி: தமிழகத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால், விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

உலகில், 19 நாடுகளில், 6.16 மில்லியன் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் தேங்காய் உற்பத்தியில், 51 சதவீதம் உற்பத்தி செய்து பிலிபைன்ஸ் முதலிடத்திலும், இந்தியா, 35 சதவீதம் உற்பத்தி செய்து இரண்டாமிடத்திலும் உள்ளது. உலக அளவில் மதிப்புடைய பொருட்களில் தேங்காயும் ஒன்று. இந்தியாவில் இருந்து கடந்தாண்டு, 13 ஆயிரத்து 621 டன் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரசு நாடுகளுக்கு, 75 சதவீதமும், நேபாலுக்கு, 7 சதவீதமும், இங்கிலாந்துக்கு, 5 சதவீதமும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு தேங்காய் ஏற்றுமதி மூலம், 18 கோடியே, 89 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.



இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், நெல்லை, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆற்றுப்படுகை பகுதியில் தென்னை விவசாயம் அமோகமாக நடந்து வருகிறது.

தேங்காய் உற்பத்தியில், 65 முதல், 70 சதவீதம் எண்ணெய் பயன்பாட்டுக்கு செல்கிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் உள்ளூர் விற்பனைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ரக காய்கள் விற்பனைக்கு செல்கிறது. முதல் மற்றும் இரண்டாம் தர தேங்காய்கள் பெருமளவில் குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கர்த்தானூர், பாலக்கோடு தாலுகா வெள்ளி சந்தை, மாரண்டஹள்ளி ஆகிய பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட மொத்த தேங்காய் விற்பனையாளர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, அரசம்பட்டி ஆகிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட தேங்காய் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.



தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வாரம் தோறும், ஒரு லட்சம் தேங்காய்கள் வெளிமாநில விற்பனைக்கு செல்கிறது. கடந்தாண்டு, ஜூன் முதல் நவம்பர் வரை தேங்காய் விலை, 6 முதல், 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு கடந்த சில மாதங்கள் வரை விலை இருந்த போதும், தற்போது, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் தேங்காய் அதிக அளவில் விற்பனைக்கு செல்கிறது. இதனால், தேங்காய் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. முதல் தர தேங்காய், 4.90 ரூபாய்க்கும், இரண்டாம் தர தேங்காய், 3.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை விட விலை சரிவடைந்துள்ளதால், வெளி மாநில விற்பனையை எதிர்பார்த்திருந்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.



கர்த்தானூரை சேர்ந்த தேங்காய் வியாபாரி ராமன் கூறியதாவது: உற்பத்தி அதிகரிப்பாலும், வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய் விற்பனைக்கு அதிகம் செல்வதாலும், தமிழக தேங்காய் விலை எப்போதும் இல்லாத வகையில் சரிந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை வாங்கி வந்து, உரித்து அனுப்ப செலவு அதிகரித்துள்ள நிலையில், விலை சரிவு தேங்காய் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us