Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தி.மு.க.,வால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் புதுகை ஆய்வுக்கூட்டத்தில

தி.மு.க.,வால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் புதுகை ஆய்வுக்கூட்டத்தில

தி.மு.க.,வால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் புதுகை ஆய்வுக்கூட்டத்தில

தி.மு.க.,வால் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் புதுகை ஆய்வுக்கூட்டத்தில

ADDED : ஆக 30, 2011 12:07 AM


Google News

புதுக்கோட்டை: ''கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்க ஆடம்பரச் செலவுகள் தான் காரணம்,'' என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டினார்.

புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 3,000 புதிய பஸ்களை வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் அரசு பஸ் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை விரைவில் உருவாக்கப்படும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை, திருப்பதி உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் தொலைதூர பஸ்கள் இயக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.



இதுபோன்று பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் கம்ப்யூட்டர் உதவியுடன் டிக்கட் முன்பதிவு மையம் விரைவில் அமைக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்கினால் தான் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும், புதிய வழிதடங்களில் பஸ் விடவும் முடியும் என்பதால் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



'பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்' என கண்டக்டர் மற்றும் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பயணிகளை அவமரியாதை செய்யும் கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கந்தர்வக்கோட்டை மற்றும் கீரனூர் அல்லது இலுப்பூரில் புதிய பணிமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.



கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, எம்.எல்.ஏ., க்கள் ராஜநாயகம், விஜயபாஸ்கர், வைரமுத்து, முத்துக்குமரன், டி.ஆர்.ஓ., சாம்பசிவம், அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பாண்டியன், பொதுமேலாளர் சங்கரன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக கந்தர்வக்கோட்டையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பணிமனை அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us