Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மண்ணுக்குள் புதையுண்ட கோவில் :உடுமலை அருகே பரபரப்பு

மண்ணுக்குள் புதையுண்ட கோவில் :உடுமலை அருகே பரபரப்பு

மண்ணுக்குள் புதையுண்ட கோவில் :உடுமலை அருகே பரபரப்பு

மண்ணுக்குள் புதையுண்ட கோவில் :உடுமலை அருகே பரபரப்பு

ADDED : ஆக 21, 2011 11:43 PM


Google News
உடுமலை : உடுமலை அருகே மண்ணுக்குள் புதையுண்ட கோவில் தென்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகே கல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேல்நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்குச் சொந்தமான நிலத்தில், முட்புதர்கள் மண்டிக் கிடந்த இடத்தை சீரமைக்கும் பணி நடந்தது. பொக்லைன் பயன்படுத்தி மண்ணை தோண்டியபோது, எழுத்துக்கள் பதிந்த கற்கள் தென்பட்டன. முட்புதர்களை அகற்றியபோது,கோவிலின் அடித்தளம் தெரிந்ததுடன் ,சுவற்றில் செதுக்கப்பட்டு பழமை மாறாமல் கல்வெட்டு எழுத்துக்களும் தென்பட்டன. கோவில்'கற்றளி' முறையில் கட்டப்பட்டுள்ளது.சிலைகள் மற்றும் நுழைவாயில் மண்டப கற்கள் சிதைந்து கிடந்தன. இது குறித்து வி.ஏ.ஓ., ஆறுமுகத்திடம் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆர்.டி.ஓ., ஜெயமணி, தாசில்தார் நல்லசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோவிலை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். 'வரலாற்றுச்சிறப்பு மிக்க பகுதியாக உடுமலை உள்ளது. மன்னர்கள் காலத்தில், ஆற்றங்கரைகளில் அதிகளவு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கல்லாபுரம் வேல்நகர் பகுதியில் காணப்பட்ட புதையுண்ட கோவில், பல நூற்றூண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம். கோபுரம், மூலவர் சிலைகள் ஆற்றில் வெள்ளப்பெருக்கில் அடித்து சென்றிருக்கலாம்' என,மக்கள் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ., ஜெயமணியிடம் கேட்டபோது,'கோவில் அமைப்பு மற்றும் சிதைந்த சிலைகளைப் பார்க்கும்போது, அம்மன் கோவிலாக இருக்கலாம் என தெரிகிறது. கோவில் குறித்து ஆய்வு செய்யும் வரை பணி மேற்கொள்ள வேண்டாம் என நிலத்தின் உரிமையாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். பல ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த கோவில், தற்போது வெளியே தெரிந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us