சத்தியமூர்த்தி பவனை சூறையாடிய இளைஞர் காங்கிரசார்:வேட்பாளரை மாற்றியதால் ஆத்திரம்
சத்தியமூர்த்தி பவனை சூறையாடிய இளைஞர் காங்கிரசார்:வேட்பாளரை மாற்றியதால் ஆத்திரம்
சத்தியமூர்த்தி பவனை சூறையாடிய இளைஞர் காங்கிரசார்:வேட்பாளரை மாற்றியதால் ஆத்திரம்
ADDED : அக் 04, 2011 10:25 PM

சென்னை:வார்டு வேட்பாளரை மாற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர் காங்கிரசார், சத்தியமூர்த்தி பவனில் புகுந்து, பொருட்களை சூறையாடினர். தங்கபாலு போட்டோவை உடைத்தெறிந்தனர்.சென்னை மாநகராட்சியின், 114வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக, சேப்பாக்கத்தைச் சேர்ந்த, இளைஞர் காங்கிரஸ் பகுதி செயலர் முருகவேல் அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கான கட்சியின் அங்கீகாரக் கடிதமும் அளிக்கப்பட்டிருந்தது. திடீரென முருகவேல் மாற்றப்பட்டு, வேட்பாளராக அன்பழகன் அறிவிக்கப்பட்டார்.இதனால் முருகவேல், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து, பேனர்களை கிழித்தெறிந்து, ரகளை செய்தனர். தங்கபாலுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவிட்டுச் சென்றனர்.
நேற்று காலை, முருகவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இளைஞர் காங்கிரசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். சத்தியமூர்த்தி பவன் முன் அமர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கொடியை அகற்றி, கறுப்புக்கொடி ஏற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால், இளைஞர் காங்கிரசாருக்கும், தங்கபாலு ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தங்களுடன் பேச்சு நடத்த, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவேண்டுமென வலியுறுத்தி, போராட்டத்தை வலுப்படுத்தினர். ஆனால், அவர் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், ஆத்திரமடைந்தனர். அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து வீசினர். கண்ணாடிகளையும் நொறுக்கினர். தங்கபாலுவின் போட்டோவையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால், சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு இருந்த போலீசாராலும், இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
போராட்டம் குறித்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி முருகவேல் கூறும்போது, 'நான் 114வது வார்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, களத்தில் தீவிர பணி செய்து வந்தேன். ஐந்து லட்ச ரூபாய் வரை செலவு செய்தேன். திடீரென என்னை மாற்றிவிட்டு, வார்டுக்கு சம்பந்தமே இல்லாத, துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக தங்கபாலு அறிவித்துள்ளார். அநீதிக்கு எதிராக போராடுகிறோம்; நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்' என்றார்.ரகளையில் ஈடுபட்டு வெளியே வந்தோரை போலீசார், வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது, இளைஞர் காங்கிரசார் மற்றும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த ரகளை சம்பவம், காங்கிரஸ் தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
மூன்று பேர் 'சஸ்பெண்ட்':சத்தியமூர்த்தி பவனில் ரகளையில் ஈடுபட்ட மூவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, காங்., தலைமை நிலைய செயலர் தாமோதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாட்டை மீறியும், மாறாத களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டதால், சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரயான்பஷீர், முருகவேல், அப்பாஸ் மூவரும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து, தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.


