வேளாங்கண்ணி மாதா பெரிய சப்பரத்தில் பவனி
வேளாங்கண்ணி மாதா பெரிய சப்பரத்தில் பவனி
வேளாங்கண்ணி மாதா பெரிய சப்பரத்தில் பவனி
UPDATED : செப் 08, 2011 12:36 AM
ADDED : செப் 07, 2011 09:01 PM

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நேற்று இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகை அடுத்த வேளாங்கண்ணியில்,'கீழை நாடுகளின் லூர்து' என அழைக்கப்படும் ஆரோக்கியமாதா தேவாலயம் உள்ளது. இக்கோவில் ஆண்டு பெருவிழா, கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றப்பட்டு, மாலையில் மாதாவின் திருத்தேர் பவனி நடந்தன.
தேவாலய மேல், கீழ் கோவில்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலியும், மாலையில் செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் செபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பர பவனி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20 பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, காலை 6 மணிக்கு தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு பேராலய வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


