பார்வையற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரொக்கப் பரிசு
பார்வையற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரொக்கப் பரிசு
பார்வையற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரொக்கப் பரிசு
ADDED : செப் 07, 2011 11:10 PM

சென்னை: தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று, ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் (2010-2011) மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஜெ.விக்னேஷுக்கு 12 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற ஜி.பிலிப்சுக்கு 9,000 ரூபாய், மூன்றாமிடம் பெற்ற பி.ராஜசேகர், எஸ்.நத்தீஷ், பி.சசிகுமார் ஆகியோருக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கப் பரிசும், 'பிளஸ் 2' பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஆர்.ஜெயப்பிரகாஷுக்கு 18 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பெற்ற ஆர்.சரவணனுக்கு 12 ஆயிரம் ரூபாய், மூன்றாமிடம் பெற்ற கிருஷ்ணகுமாருக்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


