PUBLISHED ON : அக் 12, 2011 12:00 AM

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேச்சு: பொதுத் தேர்தல் என்பது, ஆட்சியை மாற்றுவதற்கானது. அராஜக ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவிற்கு, இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இ.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு பேச்சு:ஊழலற்ற நிர்வாகம் இருந்தால் தான், திட்டங்களை நன்கு செயல்படுத்த முடியும். மத்திய - மாநில அரசு கொடுக்கும் நிதி, மக்கள் நிதி. அது கைமாறும் போது திட்டத்தின் குறிக்கோள் நிறைவேறாமல் பாழடைந்து போகும். உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலற்ற நிர்வாகம் கொண்டு வர, கம்யூனிஸ்ட் பாடுபடும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: படித்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் வேண்டும் என கருதுகின்றனர். இந்த மாற்றத்தை ஏற்படுத்த, பா.ம.க., விற்கு மக்கள், வாய்ப்பளிக்க வேண்டும்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேச்சு: கட்சிகளற்ற ஜனநாயகம் என்பது தான் காந்தியின் கனவு. அது, இந்திய அரசியலில் வளர்த்தெடுக்கப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளிலாவது கட்சி அரசியல் இல்லாமல், வேட்பாளர்களின் தகுதி அறிந்து ஓட்டளிக்கும் சூழல் உருவாக வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேச்சு: தி.மு.க.,வினர், காங்கிரஸ் கட்சியினரைச் சீண்டினால், வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். இப்போது நான் அமைச்சர் இல்லையென்றாலும், மத்திய அமைச்சர்களிடம் எனக்கு செல்வாக்கு உள்ளது. அதன் மூலம், தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி பேட்டி: நாட்டில் மின் தேவை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் மின் பற்றாக்குறை, 2,000 மெகாவாட்டாக உள்ளது. அதில், 950 மெகாவாட், கூடங்குளம் அணுமின் நிலையத்தால், டிசம்பருக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது என, பிரதமர் கூறியுள்ளார். இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, வல்லுனர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கட்சி பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன் பேச்சு: ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க., உள்ளாட்சி மன்ற அமைப்புகளை நாசப்படுத்தியது. சில கிராமங்களுக்கு பிரசாரம் செய்ய சென்றபோது, பெண்கள் கொடுக்கும் புகார்கள் வேதனை தருகிறது. இதுவரையிலும், கழிவறை வசதி எங்கள் ஊரில் இல்லை என தெரிவித்தனர்.


