சிதம்பரம் விவகாரம் முடிந்து போன விஷயம்: பிரணாப்
சிதம்பரம் விவகாரம் முடிந்து போன விஷயம்: பிரணாப்
சிதம்பரம் விவகாரம் முடிந்து போன விஷயம்: பிரணாப்
UPDATED : அக் 06, 2011 12:47 AM
ADDED : அக் 04, 2011 11:16 PM

கோல்கட்டா: 'எனக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு, முடிந்து போன விஷயம்' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரிதி கிராமம், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் சொந்த ஊர். இங்கு, ஆண்டு தோறும் நடக்கும் துர்கா பூஜையில் பங்கேற்பதற்காக, பிரணாப் முகர்ஜி வருவது வழக்கம். இந்தாண்டும், மிரிதி கிராமத்துக்கு பிரணாப் வந்திருந்தார்.
அங்கு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், நிதி அமைச்சகத்தின் குறிப்பு வெளியானது குறித்து, எனக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக, தொடர்ந்து கேள்வி கேட்கப்படுகிறது.
நானும், அவரும், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்தேன். சிதம்பரமும், இதை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனாலும், தொடர்ந்து கேள்வி கேட்கப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, இது முடிந்து போன விஷயம். இதுபோன்ற விஷயங்களில், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது தான்.
எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகின்றன. எந்த விஷயத்தையும் எதிர்ப்பது தான், எதிர்க்கட்சிகளின் வேலை. எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள், தங்களின் கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். காந்தகார் விமானக் கடத்தல் விஷயத்தில், அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த, இரண்டு மூத்த தலைவர்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்படவில்லையா? அந்த அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.
தற்போது, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, சிறப்பாகச் செயல்படுகிறது. பலம் வாய்ந்த தலைவரான சோனியா, காங்கிரஸ் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அரசுக்கும், கட்சிக்கும் இடையே, மிகச் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது.இவ்வாறு, பிரணாப் முகர்ஜி கூறினார்.


