Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்

நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்

நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்

நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்

ADDED : செப் 13, 2011 12:21 AM


Google News

திருநெல்வேலி : பரமக்குடி கலவரம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 54வது நினைவுநாள் நேற்றுமுன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தன் ஆதரவாளர்களுடன் செல்ல முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தலைவர் ஜான் பாண்டியனை போலீசார் வல்லநாட்டில் வழிமறித்து துப்பாக்கி சுடும் தளத்திற்கு அழைத்துச்சென்றனர். அவர் தன் ஆதர்வாளர்களுடன் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தியதில் ஆறு பேர் இறந்தனர். இச்சம்பவம் எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதட்ட நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு நெல்லை பஸ்ஸ்டாண்டில் இருந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை. நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், பாபநாசம், தேனி, குமுளி, நான்குநேரி, களக்காடு, வள்ளியூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்சர்வீஸ் ரத்து செய்யப்பட்டது. வெளியூர் மக்கள் ஊர் திரும்ப வழியின்றி பஸ்ஸ்டாண்டில் தவித்தனர். பஸ்கள் இயக்கப்படாததை பயன்படுத்தி சில வழித்தடங்களில் வேன்கள், கார்கள் இயக்கப்பட்டன. அந்த வாகனங்களில் பஸ் கட்டணத்தை விட 2, 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்கள் வேறுவழியின்றி கூடுதல் கட்டணம் அளித்து பயணம் செய்தனர்.



நெல்லை அருகே மானூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 3 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. விளாத்திக்குளம் அருகே ஒரு அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. இச்சம்பவம் எதிரொலியாக நெல்லை - சங்கரன்கோவில் ரோட்டில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து வெளியூர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களுக்கு முன் பாதுகாப்புக்கு போலீஸ் வாகனம் சென்றது. குறைவான எண்ணிக்கையில் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்ஸ்டாண்டில் காத்துக்கிடந்த மக்கள் நெருக்கியடித்து பஸ்களில் ஏறினர். நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற பஸ்கள் ராமையன்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. பாபநாசம் டிப்போவில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுப்பகுதி ஊர்களுக்கு பஸ்கள் புறப்பட்டுச்சென்றன. புளியங்குடி பகுதியில் இருந்து நேற்று காலை 9 மணி வரை நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நெல்லைக்கு வரும் அரசு, தனியார் ஊழியர்கள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் அவதிப்பட்டனர். பஸ்கள் ஒழுங்காக இயக்கப்படாததால் நெல்லை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us