கான்கிரீட் வீடு திட்டம் : தமிழக அரசு புது உத்தரவு
கான்கிரீட் வீடு திட்டம் : தமிழக அரசு புது உத்தரவு
கான்கிரீட் வீடு திட்டம் : தமிழக அரசு புது உத்தரவு
ADDED : ஜூலை 12, 2011 11:18 PM
சிவகங்கை: தி.மு.க., ஆட்சியில் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கான தொகையை வழங்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராமங்களில் குடிசை வீட்டில் குடியிருப்போருக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்தை தி.மு.க., அரசு 2010 மார்ச் 3 ந்தேதி துவக்கியது. வீடு கட்ட 75 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாகவும், தனிநபர் கழிப்பிட கட்ட 2,200 ரூபாயும் நிதி வழங்கப்பட்டது. மேலும் தனிநபர் வங்கி கடனாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு பரிந்துரை செய்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஆர்வத்துடன் பணிகளை துவக்கினர். கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மணல் தட்டுப்பாட்டால் பயனாளிகள் கூடுதல் விலைக்கு மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தியதால், அரசு வழங்கிய பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் வீடுகட்டுவோர் முழுமையாக பணிகளை தொடரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 சென்ட் நிலம் மற்றும் குடிசைவாசிகளுக்கு 300 சதுர அடியில் சூரியசமின் வசதி உள்ளிட்ட பசுமை கட்டட தொழில் நுட்பத்துடன் அரசு மானியத்துடன் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார். இந்நிலையில் கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு,புதிய அரசு மூன்றாவது கட்ட பணிக்கான தொகையை வழங்குமா என எதிர்பார்த்து இருந்தனர். மேலும் பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் குடியிருக்க வீடு இல்லாமல் பயனாளிகள் தவித்தனர். பணிகள் முடிவடையாமல் பாதியில் நிற்கும் வீடுகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து அனுப்ப அரசு உத்தரவிட்டு இருந்தது. திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி துவங்கி முடியும் தருவாயில் உள்ள வீடுகளுக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து அரசு விளக்கம் கேட்டிருந்தது. பணிகள் துவங்கிய வீடுகளுக்கு மட்டும் வழங்க வேண்டிய தொகையை விதிமுறைகளின் படி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.


