/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஸ் ஸ்டாப் இருக்கு; நிழற்குடை இல்லை : கடும் வெயிலில் வேதனைப்படும் பயணிகள்பஸ் ஸ்டாப் இருக்கு; நிழற்குடை இல்லை : கடும் வெயிலில் வேதனைப்படும் பயணிகள்
பஸ் ஸ்டாப் இருக்கு; நிழற்குடை இல்லை : கடும் வெயிலில் வேதனைப்படும் பயணிகள்
பஸ் ஸ்டாப் இருக்கு; நிழற்குடை இல்லை : கடும் வெயிலில் வேதனைப்படும் பயணிகள்
பஸ் ஸ்டாப் இருக்கு; நிழற்குடை இல்லை : கடும் வெயிலில் வேதனைப்படும் பயணிகள்
ADDED : ஜூலை 13, 2011 10:00 PM
'குளுகுளு' அறையில் அதிகாரிகள் 'ரெஸ்ட்' : சாட்டையை சுழற்றுவாரா, கலெக்டர்?
திருப்பூரில் உள்ள பஸ் ஸ்டாப்கள் பெரும்பாலானவற்றில், பயணிகள்
காத்திருக்க நிழற்குடை வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால்,
வழித்தடங்கள் தெரியாமலும், வெயிலிலும், மழையிலும் பயணிகள் கால் கடுக்க
காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ,
'குளுகுளு' அறையில், கோப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கலெக்டர் மதிவாணன் ஆய்வு செய்து, நிழற்குடை வசதி ஏற்படுத்த முயற்சிக்க
வேண்டும். திருப்பூருக்கு பல்வேறு மாவட்டங் கள், சுற்றுப்புற நகரங்கள்,
கிராமங்கள் மற்றும் புறநகரில் உள்ள குடியிருப்புகளில் இருந்து தினமும்
ஆயிரத் துக்கும் மேற்பட்ட பஸ்களில் இரண்டு லட்சம் மக்கள் பல்வேறு
பணிகளுக்கு நகருக்கு வந்து செல்கின்றனர்.மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள்,
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர், பனியன் கம்பெனி உள்ளிட்ட
பல்வேறு தொழில் களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என எந்நேரமும் மக்கள்
நெரிசல் மிகுந்த நகரமாக திருப்பூர் உள்ளது.திருப்பூருக்கு முக்கிய
போக்குவரத்து வழித்தடமாக, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு,
மங்கலம் ரோடு, அவினாசி ரோடு, ஊத்துக்குளி, பி.என்., ரோடுகள் உள்ளன.
இவ்வழித்தடங்களில், நிமிடத்துக்கு பல பஸ்கள் இயக்கப்படுகின்றன; மாநகராட்சி
எல்லைக்குள் மட்டும் 100 பஸ் ஸ்டாப்கள் வரை உள்ளன.
முக்கியமான ரோடுகளில் ஸ்டாப்கள்:அவிநாசி ரோடு: புஷ்பா தியேட்டர் அருகே
'ரூட்' பஸ்கள் மற்றும் 'மப்சல்' பஸ்களுக்கு என இரண்டு ஸ்டாப்கள் உள்ளன.
மேலும், பங்களா ஸ்டாப், குமார் நகர், எஸ்.ஏ.பி., தியேட்டர், காந்தி நகர்,
பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், தண்ணீர் பந்தல் என இந்த ரோட்டில்
நிரந்தர நிறுத்தங்களும், தற்காலிக நிறுத்தங்களும் உள்ளன.பி.என்.,ரோடு:
மில்லர், மேட்டுப்பாளையம், 60 அடிரோடு, சாந்தி தியேட்டர், நெசவாளர் காலனி,
பிச்சம்பாளையம்புதூர் பிரிவு, போயம்பாளையம் பிரிவு, பாண்டியன் நகர் ஆகிய
இடங்களில் ஸ்டாப்கள் உள்ளன.ஊத்துக்குளி ரோடு: ரயில்வே ஸ்டேஷன்,
டி.எம்.எப்., முதல் ரயில்வே கேட், இரண்டாவது ரயில்வே கேட், பாளையக்காடு,
கருமாரம்பாளையம், மண்ணரை, கூலிபாளையம் நால் ரோட்டில் ஸ்டாப்கள்
உள்ளன.காங்கயம் ரோடு: சி.டி.சி., வேலன் ஓட்டல், ராக்கியாபாளையம் பிரிவு
(இங்கு ஒரு நிழற்குடை உள்ளது. ஆனால், பஸ்கள் நிற்பதில்லை. தற்போது, இரு
சக்கர வாகன நிறுத்தமாக உள்ளது) நல்லூர், விஜயாபுரம் பிரிவு, முதலிபாளையம்
பிரிவுகளில் ஸ்டாப்கள் உள்ளன.தாராபுரம் ரோடு: மாகாளியம்மன் கோவில், உஷா
தியேட்டர், கரட்டாங்காடு, புதூர் பிரிவு, அரசு மருத்துவமனை (இங்கு
இருபுறமும் நிழற்குடை இருந்தாலும், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது),
நாயக்கர் மகால், செட்டிபாளையம், விவேகானந்தா ஸ்கூல், கோவில்வழி,
பெருந்தொழுவு பிரிவு ஆகிய ஸ்டாப்கள் உள்ளன. பல்லடம் ரோடு: டி.கே.டி., உழவர்
சந்தை, தென்னம்பாளையம், எல்.ஆர்.ஜி., கல்லூரி, தமிழ்நாடு தியேட்டர் (இங்கு
ஒரு பக்கம் நிழற்குடை உள்ளது; ஆனால், பயன்படுத்த முடியாத அளவுக்கு
ஆக்கிரமிப்பில் உள்ளது), வித்யாலயம் (ஒரு பக்கம் உள்ளது; ஆனால்,
ஆக்கிரமிப்பில் உள்ளது), வீரபாண்டி பிரிவு (ஒரு பக்கம் உள்ளது),
நொச்சிபாளையம் பிரிவு, டி.கே.டி., மில், சின்னக்கரையில் ஸ்டாப்கள்
உள்ளன.மங்கலம் ரோடு: மாநகராட்சி பஸ் ஸ்டாப், மாகாளியம்மன் கோவில்,
கருவம்பாளையம் (ஒரு பக்கம் மட்டும் உள்ளது. ஆனால், பூக்கடை மற்றும் வாகன
நிறுத்தமாக மாறியுள்ளது) பழக்குடோன், பாரப்பாளை யம் பிரிவு, குமரன்
கல்லூரி, பெரியாண்டிபாளையம் பிரிவு, கோழிப்பண்ணை, கான்வென்ட், குளத்துக்
கடை ஆகிய இடங்களில் ஸ்டாப்கள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள்
நிரந்தரமாக 65 பஸ் ஸ்டாப்கள் உள்ளன. ஆனால், சில இடங்களில் மட்டுமே
நிழற்குடைகள் உள்ளன. அவையும் மக்களுக்கு பயன்படாத நிலையில் பழுதடைந்தும்,
ஆக்கிரமிப்பிலும், வாகனம் நிறுத்தும் இடங்களாகவும் மாறியுள்ளன. இவை
மட்டுமன்றி புதிதாக உருவான நகரங்கள் மற்றும் குடியிருப்புகளில் பஸ்கள்
நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு, பஸ்கள் செல்கின்றன. புதிதாக
உருவாகியுள்ள ஸ்டாப்புகளிலும் நிழற்குடை வசதில்லை. பயணிகள் காத்திருக்கும்
வகையில் நிழற்குடை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது, வட்டார போக்குவரத்து
மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் பொறுப்பு. நிழற்குடையை, போக்குவரத்துக்கு
இடையூறாக இல்லாத வகையில் அமைக்க ஆலோசனை வழங்க வேண்டியது காவல் துறை கடமை.
திருப்பூருக்கு வரும் மக்கள், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து
மற்ற எந்த பகுதிக்கு செல்வதாக இருந்தாலும், ஸ்டாப் தெரியாமல் குழப்பம்
அடைவதோடு, வெகுநேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. கடும்
வெயிலையும் தாங்கிக் கொண்டு ரோட்டில் காத்திருக்கின்றனர். மழை காலத்தில்
ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் தவிக்கின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள்
கடுமையாக பாதிக்கப்படுவதோடு, அருகிலுள்ள கடைகளுக்கு தஞ்சம் புக வேண்டிய அவல
நிலை உள்ளது. நிறுத்தங்களிலும் குழப்பம்: நகரில் டவுன் பஸ் ஓரிடத்திலும்,
'மப்சல்' பஸ் வேறு இடத்திலும் நிறுத்தப்படுகின்றன. எந்த பஸ் எங்கு நிற்கும்
என தெரியாமல், பஸ் வந்ததும் ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால்,
விபத்துகள் ஏற்படுவதோடு, முதியவர்கள் பஸ்களை தவற விடும் அவலம் தொடர்கிறது.
வழக்கமாக வரும் பயணிகள் குழப்பம் இல்லாமல் நிறுத்தங்களில்
காத்திருக்கின்றனர். நகருக்கு புதிதாக வருபவர்கள், ஸ்டாப் தெரியாமல்
குழம்புகின்றனர்.வழித்தடம், நேரம் தெரிவதில்லை: நிழற்குடைகளில், அவ்வழியாக
இயக்கப்படும் பஸ்கள், வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை
வைக்கப்பட்டிருக்கும். பயணிகளுக்கு, அது உபயோகமாக இருக்கும். ஆனால்,
திருப்பூரில் நிழற்குடைகளே இல்லாததால், வழித்தடம் தெரியாமலும், பஸ்கள்
வரும் நேரம் தெரியாமலும் பயணிகள் அவதிப்படுகின்றனர். திருப்பூரில் உள்ள
குடியிருப்புகள் மற்றும் நகரங்களுக்கு, பஸ் ஸ்டாப்களே அடையாளமாகவும்,
முகவரியாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஸ்டாப்களில் நிழற்குடை இல்லாததால்,
எந்த நிறுத்தம் என தெரியாமல் வெளியூரில் இருந்து வருபவர்கள்
சிரமப்படுகின்றனர். சில பகுதிகளில் ஸ்டாப் அருகே மரங்கள் இருந்தாலும்,
அப்பகுதி, இளநீர் மற்றும் பெட்டிக்கடைகளாக மாறியுள்ளது.விபத்து ஏற்படும்
அபாயம்: பஸ் ஸ்டாப்களுக்கு என நிழற்குடை மற்றும் ரோடுகளில் தனி இடங்கள்
ஒதுக்கப்படாததால், ரோட்டை ஆக்கிரமித்து பயணிகள் காத்திருக்கின்றனர்.
அதிவேகமாக வரும் வாகனங்கள், பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மீது மோதும்
சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பிட்ட இடம் என அடையாளம்
இல்லாததால் பஸ்கள் மாறி, மாறி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. பஸ்களை
எதிர்பார்த்து காத்திருந்து, தள்ளி நிற்கும் பஸ்களில் ஏறுவதற்கு பயணிகள்
ஓடும்போது, அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி, பயணிகள் பலியாகும்
சம்பவங்களும் நடந்து வருகின்றன. எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி,
எம்.பி., நிதி, உள்ளாட்சி மன்றங்களின் நிதி என நிழற்குடை அமைக்க தமிழக அரசு
நிதி ஒதுக்கி வருகிறது; மாநகராட்சியில் பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சி
பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிதியை பயன்படுத்தி, நகரில் நிழற்குடை
அமைக்க முடியாதா? நகரிலுள்ள அனைத்து பஸ் ஸ்டாப்களிலும், போக்குவரத்து
சிரமம் ஏற்படாத வகையில் நிழற்குடை அமைக்கவும், ஸ்டாப் பெயர், வழித்தடம்,
நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
துறை வாரியாக, அடிக்கடி ஆய்வுக்கு செல்லும் கலெக்டர் மதிவாணன், பஸ் ஸ்டாப்
விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஐந்தாண்டு களாக 'குளுகுளு'
அறையில் அதிகாரிகள் முடங்கிக் கிடந்ததால், வெளியே வர தயங்குவர்; கலெக்டர்,
சாட்டையை சுழற்றினால் மட்டுமே தீர்வு காண முடியும்.
- நமது நிருபர் -


