Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆக்கிரமிப்பின் பிடியில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம்

ஆக்கிரமிப்பின் பிடியில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம்

ஆக்கிரமிப்பின் பிடியில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம்

ஆக்கிரமிப்பின் பிடியில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம்

ADDED : ஜூலை 13, 2011 11:10 PM


Google News

ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம், ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இங்கிருந்து, சென்னை மாநகர பஸ்கள், விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் புறப்படுகின்றன.

மாநகர பஸ்கள் குன்றத்தூர், ஆவடி, பட்டாபிராம், பூக்கடை, தி.நகர், பிராட்வே, வடபழனி, திருவான்மியூர் என, பல தடங்களில் இயக்கப்படுகின்றன. பல ஆயிரம் பயணிகள், தினமும் பஸ் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.பஸ்நிலையம் முன் பகுதியில் உள்ள சிமென்ட் தரையில், சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து, வியாபாரம் செய்கின்றனர்.



வியாபாரிகளிடமிருந்து, பேரூராட்சி சார்பில், தினமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதனால், சிறு வியாபாரிகள் எண்ணிக்கை, உயர்ந்து வருகிறது. பஸ் நிலையமும், ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளது. பேரூராட்சி வணிக வளாக கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும், வியாபாரிகள் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து, சிமென்ட் ஷீட் போட்டுள்ளனர். பஸ் பிடிக்க வரும் பயணிகள், தங்களுடைய இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவற்றை, பஸ் நிலையத்திலேயே நிறுத்துகின்றனர். இதனால், பஸ்நிலையம் முழுவதும் சைக்கிள் பார்க்கிங் போல காட்சியளிக்கிறது.பேரூராட்சி நிர்வாகம், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த, தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும்.



பஸ் டிரைவர் ஒருவர் கூறுகையில், '' ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில், பஸ் வந்து செல்ல வசதியாக, இரண்டு பக்கமும் சாலைகள் உள்ளன. ஒரு வழியாக, பஸ் நிலையம் உள்ளே வந்தால், மறுபுறம் வெளியில் செல்லும் வசதி உள்ளது. பஸ் நிலையம் முழுவதும் சிறுவியாபாரிகள் கடை போட்டுள்ளனர். பேரூராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.



பேரூராட்சி செயல் அலுவலர் அய்யாசாமியிடம் கேட்டபோது, ''நான், இப்போது தான் புதிதாக பொறுப்பேற்றுள்ளேன். பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், பேரூராட்சி ஊழியர்கள் மூலம், அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.



-ஜெ.ரவி-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us