அரசியலில் பழங்குடியினர் பங்கேற்க வேண்டும் : ராகுல் அழைப்பு
அரசியலில் பழங்குடியினர் பங்கேற்க வேண்டும் : ராகுல் அழைப்பு
அரசியலில் பழங்குடியினர் பங்கேற்க வேண்டும் : ராகுல் அழைப்பு
UPDATED : ஜூலை 15, 2011 12:03 AM
ADDED : ஜூலை 13, 2011 11:28 PM

கோராபுட்: ''பழங்குடியினர் தீவிர அரசியலில் பங்கேற்றால் தான், அவர்களது நீண்ட கால பிரச்னைகள் தீரும்,'' என, காங்., பொதுச் செயலர் ராகுல் பேசினார்.
காங்., பொதுச் செயலர் ராகுல், இரண்டு நாள் பயணமாக ஒடிசா வந்துள்ளார். அங்கு, பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் கோராபுட் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அதன் பின், கோட்பேடு கிராமத்தில் காங்., கட்சித் தொண்டர்களை சந்தித்தார். அப்போது, ராகுல் பேசியதாவது: பழங்குடியின மக்கள், அதிக அளவில் தீவிர அரசியலுக்கு வர வேண்டும். பழங்குடியினர் மற்றும் தலித் மக்களின் எண்ணிக்கை அரசியலில் அதிகரிக்கும் போது, அவர்களின் கோரிக்கைகள் அனைத்து தரப்பினரையும் எளிதில் சென்றடையும். இதன் மூலம் அவர்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மேலும், சமூகத்தில் அவர்களின் நிலை உயரும். எவ்வித அரசியல் பின்புலமும், தனிப்பட்ட செல்வாக்கும் இல்லாத சாதாரண மற்றும் அனைத்து தரப்பு இளைஞர்களும் அரசியலில் இணைந்து செயல்பட, காங்., கட்சி களம் அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார். இந்த சந்திப்பின் போது, ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன், 'பாஸ்கோ உருக்காலை திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முறையான இழப்பீடு, மறுவாழ்வு என, உரிய நீதி கிடைக்க வேண்டும். வளர்ச்சி அவசியமே. அதே நேரத்தில், வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, பாதிக்கப்படும் மக்களும் உரிய முறையில் கவனிக்கப்பட வேண்டும். பாஸ்கோ உருக்காலை திட்டத்தால், பாதிக்கப்படும் மக்களுக்கு முறையான மறுவாழ்வு நடவடிக்கைகளை அந்த நிறுவனம் செய்தால், நாங்களும் அந்நிறுவனத்திற்கு துணையாக இருப்போம். தவறினால், நீதி கிடைக்க மக்களுடன் சேர்ந்து போராடுவோம்' என்றார்.


