ADDED : ஜூலை 14, 2011 01:37 AM
சேலம்: மும்பையில் நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, நேற்று சேலம் மாநகர போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மும்பை சவேரிபரார், தாதர் பஸ் ஸ்டாண்ட், ஓபெரா ஹவுஸ் ஆகிய மூன்று இடங்களில், நேற்று இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில், 17 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சேலம் மாநகரில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், நேற்று இரவு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஜாமியா மஜித், குழந்தை இயேசு பேராலயம், சுகவனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகர ரோந்து பணியில், கூடுதல் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். சந்தேகப்படும்படியான நபர்களிடம், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்வதோடு, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


