Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புதிய காப்பீட்டு திட்டத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு நெருக்கடி : கூடுதல் வசதிகள் அவசியம் தேவை

புதிய காப்பீட்டு திட்டத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு நெருக்கடி : கூடுதல் வசதிகள் அவசியம் தேவை

புதிய காப்பீட்டு திட்டத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு நெருக்கடி : கூடுதல் வசதிகள் அவசியம் தேவை

புதிய காப்பீட்டு திட்டத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு நெருக்கடி : கூடுதல் வசதிகள் அவசியம் தேவை

ADDED : ஜூலை 14, 2011 10:45 PM


Google News

முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு, பொது மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

அதே வேளையில், இந்த காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் சுமையை, அரசு மருத்துவமனைகள் சமாளிக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீடுத் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, 'கூடுதல் பலன்களுடன், புதிய மருத்துவ காப்பீடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்' என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, புதிய காப்பீடுத் திட்டம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.



முந்தைய காப்பீடு திட்டத்துடன் ஒப்பிட்டால், புதிய திட்டத்தில் பல அம்சங்கள் சிறப்பாக உள்ளதாக பொது மக்கள் மட்டுமின்றி, காப்பீடு துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர். பழைய காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்திய, 'ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவன ஊழியர்களும், புதிய திட்டத்தை வரவேற்கின்றனர். காப்பீடு தொகை நான்கு லட்ச ரூபாயாக உயர்வு, 950 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீடு, அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை செலவுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் உள்ள மருத்துவ செலவுகளையும், காப்பீட்டுக்குள் கொண்டு வந்திருப்பது போன்ற பல நல்ல அம்சங்கள் உள்ளதாக டாக்டர்களும் பாராட்டுகின்றனர். ஆனால், இத்திட்டத்தின் கீழ், 75 சதவீத சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது நடைமுறையில் சாத்தியப்படுமா என கேள்வி எழுப்பப்படுகிறது.



இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,'முந்தைய காப்பீடு திட்டத்தால், பல தனியார் மருத்துவமனைகளுக்கு நல்ல வருமானம் என்ற புகார் பரவலாக எழுப்பப்பட்டதால், புதிய காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தனர். அண்ணாநகரை சேர்ந்த மருந்து நிறுவன பிரதிநிதி நடராஜன் கூறும்போது,'ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்து, அதற்கான காப்பீடு தொகையை பெற்று, அரசு மருத்துவமனையின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்பது நல்ல நோக்கம்தான்.

ஆனால், ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் கூட்ட நெரிசல், இட வசதியின்மை, ஊழியர்களின் பொறுப்பின்மை போன்றவை இருக்கும் நிலையில், இந்த கூடுதல் சுமையை சமாளிப்பார்களா என்பது சந்தேகம் தான்' என்றார். மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறும்போது, 'புதிய காப்பீடு திட்ட சிகிச்சைக்காக தனி வார்டு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அப்படி வார்டு ஏற்படுத்தப்பட்டால் அதற்கு தனியாக டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார். மேலும், முந்தைய காப்பீடு திட்டத்துக்கு, பிரீமியத் தொகைக்காக கடந்த ஆட்சியில், அரசு தரப்பில் முதலில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பின் அது 700 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், புதிய திட்டத்தில் காப்பீடு தொகை நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், பிரீமியத் தொகைக்கு ஒதுக்கப்படும் நிதியும் உயர்த்த வேண்டும். புதிய காப்பீடு திட்டம் குறித்து, 'ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவன ஊழியர் கணேஷ் கூறும்போது,'முந்தைய காப்பீடு திட்டத்தில், காப்பீடு தொகையை தனியார் மருத்துவமனைகளே கேட்டு பெற்றுக் கொண்டனர்.



இதில், அரசு மருத்துவமனைகளில் தாமதம் ஏற்பட்டதுடன், அதையும் நாங்களே தான் செய்தோம். 75 சதவீத சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கும்போது எல்லாமே தாமதமாக வாய்ப்புள்ளது' என்றார். இந்த சந்தேகங்கள் குறித்து, சுகாதார துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது,'இப்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நாட்களில், இது குறித்து அறிவிப்பு வெளியாகும். படிப்படியாக எல்லாம் சரியாக நடக்கும்' என்றார்.



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us