கவர்னர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
கவர்னர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
கவர்னர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
ADDED : ஜூலை 15, 2011 04:36 AM
சென்னை:தமிழக கவர்னராக பர்னாலா, பதவியில் நீடிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் விஜயலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழக கவர்னராக பர்னாலா, 2006ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் 19ம் தேதியுடன் இவரது பதவிக் காலம் முடிந்து விட்டது. அவர் எந்த தகுதி அடிப்படையில் பதவியில் தொடர்கிறார் என்பதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மணிகண்டன் வரதன் செட்டியார், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகினர். 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஜனாதிபதியின் விருப்பத்தின்படி கவர்னர் தனது பதவியை வகிக்கிறார். கவர்னரின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் என்றாலும், அந்த பதவியில் மற்றொருவர் நியமிக்கப்படும் வரை, அவர் பதவியில் தொடரலாம். பதவியில் தொடர கவர்னரை அனுமதித்திருப்பதன் மூலம், மத்திய அரசு உத்தரவுப்படி அவர் பதவியில் தொடர்கிறார் என கருத வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


