பயங்கரவாத அமைப்புகள் செழித்து வளர சில நாடுகளின் ஆதரவே காரணம் : மத்திய உள்துறை அமைச்சர் புகார்
பயங்கரவாத அமைப்புகள் செழித்து வளர சில நாடுகளின் ஆதரவே காரணம் : மத்திய உள்துறை அமைச்சர் புகார்
பயங்கரவாத அமைப்புகள் செழித்து வளர சில நாடுகளின் ஆதரவே காரணம் : மத்திய உள்துறை அமைச்சர் புகார்

திம்பு : 'பயங்கரவாதச் சம்பவங்களில் ஈடுபடுவோர், எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை எனக் கூறுவதன் மூலம், தனது கடமையில் இருந்து எந்த நாடும் தப்பித்து விட முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
பூடானின் திம்பு நகரில் நடந்து வரும், சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: தெற்காசிய பிராந்தியத்துக்கு, பயங்கரவாதம் மிகப் பெரிய சவாலாக உள்ளது.
பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், கள்ள நோட்டு உள்ளிட்ட பிரச்னைகளை தடுப்பதற்கு, தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதச் சம்பவங்களில் ஈடுபடுவோர், எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை எனக் கூறுவதால் மட்டும், எந்த நாடும், தனக்கு உள்ள கடமையில் இருந்து தப்பித்து விட முடியாது. பயங்கரவாதத்தால், அண்டை நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுப்பேற்க வேண்டும்.
தெற்காசிய பிராந்தியம், மிகவும் ஆபத்தான பிராந்தியமாக மாறியுள்ளது. தெற்காசியாவில் பயங்கரவாதச் சம்பவங்கள், இந்தாண்டில் கணிசமாக நடந்துள்ளன. இந்த பிராந்தியத்தில், பயங்கரவாத அமைப்புகள் செழித்து வளர்கின்றன. இதற்கு, குறிப்பிட்ட சில நாடுகள் ஆதரவு அளிப்பது தான் காரணம். கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம், மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து ஆபத்து ஏற்படுகிறது.
பயங்கரவாதம் என்பது, நமக்கு பொதுவான சவாலாக உள்ளது. சார்க் நாடுகள், முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டால் மட்டுமே, இதை ஒழிக்க முடியும். இந்த விஷயத்தில், அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட, இந்தியா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


