Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தே.மு.தி.க., பிரமுகர் வெட்டிக் கொலை

தே.மு.தி.க., பிரமுகர் வெட்டிக் கொலை

தே.மு.தி.க., பிரமுகர் வெட்டிக் கொலை

தே.மு.தி.க., பிரமுகர் வெட்டிக் கொலை

ADDED : ஜூலை 26, 2011 01:09 AM


Google News
Latest Tamil News

சென்னை : கோட்டூர்புரத்தில் தே.மு.தி.க., பிரமுகர், நடுரோட்டில் பள்ளி குழந்தைகள் கண் முன், கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை கோட்டூர்புரம், அம்பேத்கர் நகர், கல்நார் வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 37; தே.மு.தி.க., 138வது வட்டச் செயலர். இவருக்கு சுதாதேவி, 32, என்ற மனைவியும் இந்துமதி, சிவப்பிரியா என்ற இரண்டு மகள்களும், விஷ்ணு என்ற மகனும் உள்ளனர். இதில், இந்துமதியும் விஷ்ணுவும் பிளஸ் 1 படிக்கின்றனர். சிவப்பிரியா எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.



ஹரிகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகம்மாள் என்பவர், 'உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்; வெளியே வாருங்கள்' என, அழைத்தார். மாலை நேரம் ஆனதால், குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்து விடலாம் என்று நினைத்து, ஹரிகிருஷ்ணனும், முருகம்மாளுடன் வெளியே வந்தார். நேராக பள்ளிக்குச் சென்று தனது மகள்களை அழைத்துக் கொண்டு கோட்டூர்புரம் பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது, அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டோவில் மறைந்திருந்த மர்மக் கும்பல், ஹரிகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினர். இதில், அவரது உடலில் பல இடங்களில் பலமான வெட்டு விழுந்தது. குடல் சரிந்து, வெளியே வந்து விழ, இடுப்பில் செருகிய ஒரு கத்தி திருப்பி எடுக்க முடியாமல், அவரது இடுப்பிலேயே சிக்கிக் கொண்டது. இந்த கொடூர சம்பவம், அவருடைய குழந்தைகள் முன் நடந்ததால், அவர்கள் அலறினர்.



சம்பவம் நடந்த இடத்திற்கு எதிர்புறத்தில், தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியிலிருந்தும் மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். கையில் பட்டாக் கத்திகளுடன் 10க்கும் மேற்பட்டவர்கள், ஹரிகிருஷ்ணனை வெட்டிய சம்பவத்தால், பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் நாலாபுறமும் சிதறி ஓடினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹரிகிருஷ்ணனை, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



சம்பவத்தை நேரில் பார்த்த ஹரிகிருஷ்ணனின் தங்கை முத்துலட்சுமி கூறும் போது, ''வீட்டில் இருந்த எனது அண்ணன் ஹரிகிருஷ்ணனை, முருகம்மாள் என்பவர் வெளியே வாருங்கள், வேலை இருக்கிறது என்று அழைத்து சென்றார். அப்படியே பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வருவதாக தெரிவித்துச் சென்ற ஹரிகிருஷ்ணனை, பிள்ளையார் கோவில் அருகே ரவுடி கும்பல் அநியாயமாக வெட்டி சாய்த்துள்ளனர். ''என் அண்ணனை, வருகிற கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று, கடந்த மூன்று நாட்களாகவே அவரது மொபைல் போனில் சிலர் மிரட்டிய வண்ணம் இருந்தனர். அந்த மிரட்டலை மதிக்காத அண்ணனை, இப்போது படுகொலை செய்துள்ளனர்,'' என்றார். இது குறித்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.



முன்விரோதம் காரணமா?



ஹரிகிருஷ்ணனை வீட்டில் இருந்து வெளியில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் முருகம்மாளின் மகன், கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பிரபல ரவுடி நெல்சன் என்பவனின் மகளை காதல் வலையில் வீழ்த்தி, அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், இருவரையும் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் சமாதானம் பேசியது ஹரிகிருஷ்ணனாம். இதனால், நெல்சனுக்கும், ஹரிகிருஷ்ணனுக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஹரிகிருஷ்ணனை கொலை செய்த கும்பலில் நெல்சன் இடம் பெற்றிருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

போலீசாரின் சந்தேக நிழலில் உள்ள நெல்சன், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கந்தன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us