Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க எச்சரிக்கை : தாமதம் செய்தால் ஒப்பந்தம் ரத்து என அறிவிப்பு

மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க எச்சரிக்கை : தாமதம் செய்தால் ஒப்பந்தம் ரத்து என அறிவிப்பு

மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க எச்சரிக்கை : தாமதம் செய்தால் ஒப்பந்தம் ரத்து என அறிவிப்பு

மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க எச்சரிக்கை : தாமதம் செய்தால் ஒப்பந்தம் ரத்து என அறிவிப்பு

ADDED : ஆக 03, 2011 01:11 AM


Google News



சென்னை : 'மாநகரப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டியிருக்கும்'' என, ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 'கேப்டன் காட்டன்' கால்வாய் பணிகள் தாமதமாக நடந்து வருவதால், அதன் பணி ஒப்பந்தத்தை அதிரடியாக மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் உள்ள, 'கேப்டன் காட்டன்' கால்வாய், கூவம், விருகம்பாக்கம் - அரும்பாக்கம், ஓட்டேரி நல்லா, அடையாறு, மாம்பலம், நந்தனம், வடக்கு பக்கிங்காம் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட 22 நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், 1,448 கோடி ரூபாய் இதற்காக செலவிடப்படுகிறது. இப்பணிகளுக்கான ஒப்பந்தம், 2010ம் ஆண்டு துவக்கத்தில் விடப்பட்டது. 533 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் அமைப்பதற்காக, நகரின் பல இடங்களில் குழிகள் தோண்டி, கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.



சட்டசபை தேர்தல் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், மணல், ஜல்லி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்ததால், ஒப்பந்த விலையை உயர்த்த வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்தனர். கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், துவக்கத்திலிருந்தே, கால்வாய் அமைக்கும் பணி மந்த கதியில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருவதால், கால்வாய் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழியால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பல இடங்களில் வாகனங்களில் செல்லவே முடிவதில்லை. இரவு நேரங்களில், கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழியால், விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.



இதுகுறித்து பேசிய ஒப்பந்ததாரர்கள் தரப்பு,''கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால், கால்வாய் அமைக்கும் பணிக்கு எடுக்கப்பட்ட ஒப்பந்த விலைக்குள் வேலையை முடிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டது. இதனால், ஒப்பந்த விலையை அதிகரிக்க மாநகராட்சியிடம் முறையிட்டு உள்ளோம். மேலும், கால நீட்டிப்பு அளிக்குமாறும் கேட்டுள்ளோம்'' என்கின்றனர். கால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்ந்து ஆமை வேகத்தில் நடப்பதால், அக்டோபரில் துவங்கும் வடகிழக்குப் பருவ மழைக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படுமா என்பதில், சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாய் அமைக்கும் 533 கி.மீட்டரை, இரண்டாகப் பிரித்து பணிகளை வேகப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, 165 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணியை முடிக்குமாறு, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் சுணக்கம் ஏற்பட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மறு டெண்டர் கோரப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது. இத்துடன், கால்வாய் அமைக்கும் பணியை மிகவும் தாமதமாக செய்து வரும், 'கேப்டன் காட்டன்' கால்வாய் ஒப்பந்தத்தை, அதிரடியாக மாநகராட்சி ரத்து செய்துள்ளது.



மழைநீர் கால்வாய் பணிகள் மந்தமாக நடைபெறுவது பற்றி மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தேர்தல் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்ட காலத்துக்கு, காலநீட்டிப்பு வழங்குமாறு ஒப்பந்ததாரர்கள் கேட்டனர். இதையேற்று, இரு மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி பணிகளை திட்டமிட்டபடி முடிக்காவிட்டால், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். 'கேப்டன் காட்டன்' கால்வாய் பகுதியில், 10.5 கி.மீ., தூரத்துக்கு கால்வாய் அமைக்க வேண்டும். ஆனால், 200 மீட்டர் தூரத்துக்கே பணிகள் நடந்துள்ளன. இதனால், சரவணா இன்ஜினியரிங் கார்ப்பரேஷனுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுப்ரமணியன் கூறினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் மழைநீர் கால்வாய் பணிக்கான மொத்த திட்ட மதிப்பு, 1,448 கோடி ரூபாய். இதில், 756 கோடி ரூபாய் முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமாக பணிகள் முடிந்து, அவற்றை ஆய்வு செய்த பின்னரே, ஒப்பந்ததாரர்களுக்கான தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கட்டமாக பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு இதுவரை முதல்கட்ட ஒதுக்கீட்டில், 45 சதவீதத்திற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us