Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது' : கருணாநிதி ஆவேசம்

"தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது' : கருணாநிதி ஆவேசம்

"தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது' : கருணாநிதி ஆவேசம்

"தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது' : கருணாநிதி ஆவேசம்

ADDED : ஆக 06, 2011 11:10 PM


Google News
Latest Tamil News
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, திருவாரூர் தெற்கு வீதியில் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் இன்று நடைபெறும் இந்த கூட்டம், மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மீது, 'ஜெயா' அரசு போட்டுள்ள பொய் வழக்கை கண்டித்து நடைபெறும் கூட்டமாகும். பொய் வழக்குகள் இந்த ஆட்சியில் வேக வேகமாக தொடரப்பட்டு, கட்சி மாவீரர்களை சாய்த்துவிடலாம் என்ற எண்ணிக் கொண்டு நடத்தும் அராஜகத்துக்கு பதிலடிக்கொடுக்க அல்ல. நாம் அதை எப்படி பார்க்கிறோம் என்பதை எடுத்துச் செல்ல நான் பயன்படுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்த காலத்தை, இன்று, தி.மு.க., ஆட்சியை தோற்கடித்துவிட்டு, நடைபெறும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தயவு செய்து ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். பொய் வழக்கை கண்டிக்கிறோம் என்று சொன்னார்கள். இது பொய் வழக்கு மாத்திரம் அல்ல. இந்த வழக்குகள் அராஜக வழக்குகளாகவும் இன்றைக்கு தொடரப்படுகின்றன. பூண்டி கலைவாணன் மீது, 3 வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. முதல் வழக்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினோடு அவர் சென்றார் என்பதுக்காக; 2வது வழக்கு அவருடைய பொறுப்பின்மையால் ஒரு மாணவர் இறந்து விட்டார் என்ற ஜோடிக்கப்பட்ட கற்பனையான ஒரு வழக்கு. சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் போராட்டம் நாடு முழுவதும் இன்று நடக்கிறது. அதிலே தன்னை ஒப்படைத்துக் கொண்ட மாணவன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் மகன். லாரி விபத்தில் சிக்கி இறந்து போனான். இறந்து போன சிறுவனின் சடலத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இது விபத்தல்ல, தி.மு.க., செயலாளர் தூண்டுதல் தான் காரணம் என்ற கூறி அதற்கு ஒரு வழக்கு. எங்கே இதிலும் ஜாமீன் பெற்றுவிடுவார்கள் என்ற சந்தேகத்தில் அழுத்தம் திருத்தமாக, 'ஆப்பு' அடிக்க வேண்டும் என்ற மூன்றாவதாக என்ன வழக்கு போடலாம் என்ற யோசித்து பார்த்து, குண்டர் சட்டம் ஏவினர். கலைவாணனை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும். தி.மு.க.,வை வெறுக்க வேண்டும். அதன் காரணமாக கட்சி பலவீணப்பட வேண்டும் என்பதற்காக குண்டர் சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். மறைந்த நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஞாபகத்தில் வருகிறார். அவருடைய பெயரை தான் கலைவாணனுக்கு வைத்தேன். 'நீங்கள் தான் இந்த பெயர் வைத்தீர்கள்' என்பார். 'நான் பெயர் வைத்த பாவம் நீ இன்று குண்டர் சட்டத்தில் அடைபட்டுள்ளாய்' என்று வருத்தப்பட்டுள்ளேன். குண்டர் சட்டம் பயன்படுத்துவதன் மூலம் நான் பயங்கரமான ஆட்சியை நடத்துகிறேன் பார் என்று ஜெயலலிதா நாட்டிலே இருப்பவர்களுக்கு தெரிவிக்கிறார்.

இன்றைக்கு அ.தி.மு.க., எந்த வகையில் ஆட்சிக்கு வந்துள்ளது?; என்ன சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளது? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தி.மு.க., ஆட்சியிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளார்கள் என்று மேடைக்கு மேடை பேசினர். இதை கேட்டு உங்கள் காதுகள் புளித்துப்போயிருக்கும்.

ஒரு அரசு அதனுடைய செலவினங்களுக்காக, திட்டங்களுக்காக, மக்கள் பிரச்னையை அணுகுவதுக்காக கடன் வாங்கும். 2006ல் அ.தி.மு.க., ஆட்சி நடந்து முடியும் போது, தமிழக அரசின் கடன் சுமை, 57 ஆயிரத்து, 476 கோடியாக இருந்தது. இதை நாம் சுட்டிகாட்டினோம். நாங்கள் நீங்கள் ஏற்றியிருந்த கடனோடு, 2006 - 2011 வரை தி.மு.க., ஆட்சியில், 43 ஆயிரத்து, 898 கோடி ரூபாய் தான். இந்த ஒரு லட்சத்து 1,341 கோடி ரூபாய் பெரிதாக சொன்னார்களே, நம்மை பற்றி புகார் சொன்னார்களே, கேவலமாக பேசினார்களே. தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியில், 17 ஆயிரத்து, 403 கோடி ரூபாய் கடன் உள்ளது. தி.மு.க., அரசு பெற்ற கடனை பெரிதுபடுத்தி பேசியவர்கள், ஒரு லட்சத்து, 18 ஆயிரம் கோடியாக தமிழக கடன் சுமையை உயர்த்தியிருக்கிறார்கள் என்று எண்ணும் போது, இதை வெட்கக்கேடு என்று சொல்லுவதா? ஆளும், எதிர்கட்சி இணைந்து எவ்வாறு மக்களுக்கு நன்மை செய்யலாம், அதற்கேற்றவாறு எப்படி பட்ஜெட் போடலாம் என்ற அந்த நல்ல நோக்கத்தோடு இருந்தால் தான் வரவு-செலவு திட்டம் மக்களுக்கு போடப்பட்டதாக இருக்க முடியும். அந்த வகையில் தி.மு.க., ஆட்சியில், 99 பங்கு எதிர் கட்சிக்காரர்களுடன் பேசி, எண்ணங்களை பரிமாறிக் கொண்டு பகுத்து தான் பட்ஜெட் போட்டது. அனைத்து கட்சியையும் அழைத்து, பேசி, 'டெண்டர்' கோரி இலவச கலர் 'டிவி' தந்தோம். ஒரு வேளை, ஓட்டளிக்கும்போது மக்கள் அதை மறந்திருக்கலாம். அது திருவாரூர்காரர்கள் அல்ல. தமிழகத்திலே பல பேர் ஏதோ வரப்போகிறது என்று நம்பி, இல்லாதது, பொல்லாதது சொன்னதை எல்லாம் நம்பி ஏமாந்துள்ளனர். ஒரு கலைவாணனை அடக்கிவிட்டால்... இன்னொரு கலைவாணன் கிடைப்பது கஷ்டம் தான். இருந்தாலும் அந்த கலைவாணன் சிந்துவது ஒரு துளி ரத்தம், அதிலே ஆயிரக்கணக்கான கலைவாணன் வருவார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. சொத்துக்குவிப்பு வாழக்கில் ஜெயலலிதா, 130 தடவை வாய்தா வாங்கியிருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இது 'வாய்தா' வழக்கு. குப்பனோ, சுப்பனோ இரண்டு நாள் தவணை கேட்டால் முடியாது வா என்று கையிலே விலங்கு போடும் போலீஸ். 14 ஆண்டு காலம் வாய்தா வாங்கும் ஜெ.,வை விட்டு வைத்துள்ளனர். யார், யாரோ இன்று சிறைபடுகிறார்கள்; தண்டிக்கப்படுகிறார்கள். உயர் ஜாதியில் பிறந்துவிட்ட காரணத்தால் ஒரு அம்மையார் இழுத்தடிக்கிறார்.

தி.மு.க., திராவிடர் என்ற உணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தும் ஒரே கட்சி என்பதால் அழிக்கத் துடிக்கின்றனர். பெரியாரால் உருவாக்கப்பட்டு, அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம். 3,000 ஆண்டுக்கு முற்பட்ட இனம். தி.மு.க.,வை அழித்தால் தான் நாம் வாழ முடியும் எண்ணும் கூட்டம் தமிழகத்தில் மிச்சம் மீதி இருக்கிறது. நான் எவ்வளவு நாள் இருப்பேன் என்று எனக்கு தெரியாது. இன்றே கூட...? இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது, பட்டுப்போக செய்ய முடியாது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

பத்திரிக்கையாளர்கள் மீது பாய்ச்சல் : திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி பத்திரிக்கையாளர்கள் மீது திடீர் தாக்குதல் தொடுத்தார். அவர் பேசியதாவது: இங்கே இருக்கும் பத்திரிக்கையாளர் எல்லோரும் வாயில் கோந்து போட்டு மூடியிருக்கிறார்கள். பேனா முனையை உடைத்து அமர்ந்துள்ளனர். கல்மாடி மீது புகார் என்றால் எடு பேனாவை, கொட்டு எழுத்துக்களை, போடு முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போடுகிறார்கள். அதேபோல், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் மீது குற்றம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், 20க்கு, 200 ஆக கதைகளை கட்டுகின்றனர். என்ன காரணம். இன்று தமிழகத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகுப்பினருக்காகவே கூர்தீட்டிக்கொண்டு பேனாவை பயன்படுத்தும் பத்திரிக்கையாளர்கள், நாம் ஒரே மூச்சில் எதிர்ப்பை தெரிவித்தால் தி.மு.க.,வை அழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

தமிழகத்தில் வேடிக்கையான வழக்குகள் : ''காலையில், யார் முகத்தில் முழிக்கப்போகிறோம் என்ற சந்தேகத்தில் படுத்து உறங்கச் சென்றால், நாட்டில் அமைதி நிலவுமா?'' என, கருணாநிதி பேசினார். திருவாரூரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்தில், வேடிக்கையான வழக்கு சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். திருவாரூர் மாவட்ட செயலர் மீது பொய் வழக்கு தொடரப்பட்ட அதே நாளில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த, தென்சென்னை மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., அன்பழகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தனர்.

அதேபோல், சேலம் வீரபாண்டி ஆறுமுகம், யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், அவரை, போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும்படி செய்து, கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் அவரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். இது என்ன நாடா? இல்லை கரும்புலி வாழும் காடா? காலையில், யார் முகத்தில் முழிக்கப்போகிறோம். இன்ஸ்பெக்டர் முகத்திலா, ஐ.ஜி., முகத்திலா, டி.ஐ.ஜி., முகத்திலா என்ற சந்தேகத்தில் படுத்துறங்க செல்வார்களேயானால்... நாட்டில் அமைதி இருக்குமா? இவ்வாறு கருணாநிதி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us