Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வங்கி பணிகளுக்கு பொது போட்டித் தேர்வு போட்டியாளர்கள், பயிற்சி மையங்கள் வரவேற்பு

வங்கி பணிகளுக்கு பொது போட்டித் தேர்வு போட்டியாளர்கள், பயிற்சி மையங்கள் வரவேற்பு

வங்கி பணிகளுக்கு பொது போட்டித் தேர்வு போட்டியாளர்கள், பயிற்சி மையங்கள் வரவேற்பு

வங்கி பணிகளுக்கு பொது போட்டித் தேர்வு போட்டியாளர்கள், பயிற்சி மையங்கள் வரவேற்பு

UPDATED : ஆக 26, 2011 01:01 AMADDED : ஆக 25, 2011 11:56 PM


Google News

சென்னை : பொதுத் துறை வங்கிகளின் காலிப் பணியிடங்களை நிரப்ப, மீண்டும் பொது போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கு,போட்டியாளர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு வரை, பொதுத் துறை வங்கிகளின், அதிகாரிகள், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, பி.எஸ்.ஆர்.பி., மூலம், ஆண்டிற்கு இரு முறை பொது போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதன் பின், தங்கள் பணியிடத் தேவையைப் பொருத்து, வங்கிகள் தனித்தனியாக போட்டித் தேர்வுகளை நடத்தி வந்தன. இத்தேர்வில் பங்கேற்கும் போட்டியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. மேலும், போட்டியாளர்கள் மாதந்தோறும் ஏதாவதொரு வங்கித் தேர்வில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். இம்முறையை மாற்றி, பொதுத் துறை வங்கிகளின் காலிப் பணியிடங்களை நிரப்ப, மீண்டும் பொது போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பெற்றோர் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவியது.



தற்போது, எஸ்.பி.ஐ., வங்கியைத் தவிர, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 19 பொதுத் துறை வங்கிகள் ஒருங்கிணைந்து, 'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்ஷன்'(ஐ.பி.பி.எஸ்.,) எனும் அமைப்பின் மூலம், வங்கிப் பணியாளர்களுக்கான பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளன. இதன் முதல் படியாக, அடுத்த மாதம் 18ம் தேதி, 20 ஆயிரம் வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வும், வரும் நவம்பர் 20ம் தேதி, 30 ஆயிரம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வும் நடைபெற உள்ளது.



இதுகுறித்து, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்க பொதுச் செயலர் கருணாநிதி கூறும்போது, ''ஐ.பி.பி.எஸ்., மூலம், வங்கிப் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதால், போட்டியாளர்களின் தேர்வுக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் ஆகியவை வெகுவாகக் குறையும். பணியிட எண்ணிக்கையும் பல மடங்கு உயருவதால், வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரிக்கும்,'' என்றார்.



சென்னை ஆவடியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் கூறும்போது, ''தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதி வருகிறேன். பொது போட்டித் தேர்வு என்ற, என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோரின் நீண்டகால கோரிக்கை நிறைவேறி உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.



தேர்வு எழுதுவதற்கான தகுதி



வங்கி அதிகாரி (Probationary Officer) பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கு, குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓ.சி., - 30, ஓ.பி.சி., - 33 மற்றும் எஸ்.சி., - 35 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு, குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.சி., - 28, ஓ.பி.சி., - 31 மற்றும் எஸ்.சி., - 33 என, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



என்.கிரிதரன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us