மந்த கதியில் இயற்கை எரிவாயு முனைய பணி விரைந்து முடிக்க தொழிற்துறையினர் எதிர்பார்ப்பு
மந்த கதியில் இயற்கை எரிவாயு முனைய பணி விரைந்து முடிக்க தொழிற்துறையினர் எதிர்பார்ப்பு
மந்த கதியில் இயற்கை எரிவாயு முனைய பணி விரைந்து முடிக்க தொழிற்துறையினர் எதிர்பார்ப்பு
சென்னை : சென்னை, எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும், இயற்கை எரிவாயு முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த எண்ணெய் படுகைகளை குத்தகைக்கு எடுத்து, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆழ்குழாய்கள் மூலம் எடுத்து வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம், நாளொன்றுக்கு, 80 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. இந்த எரிவாயு ஆந்திராவில் உள்ள மின் உற்பத்தி மற்றும் உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு, இந்த எரிவாயுவை அளிக்க முதலில் சம்மதம் தெரிவித்த ரிலையன்ஸ், பின்னர் மறுத்து விட்டது.
தமிழகத்தில் எரிபொருள் தேவையை சமாளிக்க, கத்தார், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, திரவ நிலையில், கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து, அவற்றை சேமித்து வைத்து, பின்னர் வாயுவாக மாற்றி, வினியோகிக்கும் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும். இதற்காக, 1997ல்,'டிட்கோ' நிறுவனம், சென்னை, எண்ணூர் துறைமுகத்தில், ஆண்டொன்றுக்கு 2.5 மில்லியன் டன் திரவ நிலை இயற்கை எரிவாயு கிடங்கு அமைக்க முடிவெடுத்தது.
இத்திட்டத்தை செயல்படுத்த, உலகளாவிய ஏலம் மூலம், 1998ம் ஆண்டு பிர்லா குழுமத்தைச் சேர்ந்த கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஜெர்மனியைச் சேர்ந்த சீமென்ஸ் புராஜக்ட் வென்ச்சர், அமெரிக்காவைச் சேர்ந்த சி.எம்.எஸ்., எனர்ஜி மற்றும் யுனோகால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உட்சைட் ஆகிய ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. கத்தார் நாட்டில் இருந்து 'ராஸ் கேஸ்' என்ற எண்ணெய் வாயு கிடங்கில் இருந்து திரவ நிலையில் இயற்கை எரிவாயு, இறக்குமதி செய்வதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழக அரசு மற்றும் மின்வாரியம் இத்திட்டத்திற்கான நிதி உத்தரவாதம் வழங்காததால், திட்டம் செயல்படுத்தவில்லை. மேலும், 1996ம் ஆண்டிலேயே மத்திய அரசுக்குச் சொந்தமான காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் (கெயில்), இத்திட்டத்தை எண்ணூரில் நிறுவ முன் வந்தது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை, கெயில் நிறுவனத்திடம் வழங்கியிருந்தால், இந்நேரம் இத்திட்டம் முடிக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், தமிழக அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த மீண்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எண்ணூரில் ஆண்டுக்கு, 5 மில்லியன் டன் திறன் கொண்ட திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் செயல்படுத்த, டிட்கோ நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), உடன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது. பணிகள் மந்த கதியில் நடப்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு முடிவடைவது சந்தேகமே. தமிழக அரசு காலதாமதத்தை களைந்து, பணிகளை முடுக்கிவிட்டால், விரைவில் இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
மாசு இல்லாத எரிபொருள்
நந்தினி கல்சல்டன்சி மையத்தின் நிறுவனர் வெங்கட்ராமன் கூறியதாவது: தமிழகம், குஜராத்தில் ஒரே நேரத்தில், திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சில காரணங்களால் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை. தற்போது, குஜராத்தில் இரண்டு முனையங்களும், மகாராஷ்டிராவில் ஒரு முனையமும் உள்ளது. கொச்சியில், ஒரு முனையம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. குஜராத்தின் உரத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும், இயற்கை எரிவாயு மூலம் தான் உரங்கள் தயாரிக்கின்றன. இதன் மூலம், அம்மாநிலங்களில் மாசு இல்லாத எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.
என்ன பயன்கள் கிடைக்கும்?
இத்திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள், நாப்தாவிற்கு பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி உர உற்பத்தி செய்யும் திட்டங்கள், போக்குவரத்து வாகனங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயு வழங்கும் கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் ஆகியவை பயனடைவதுடன், தமிழகம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் விரைவாக முன்னேறும்.
-வீ.அரிகரசுதன் -


