"புளிய மரங்களையும் தி.மு.க.,வினர் விட்டு வைக்கவில்லை'
"புளிய மரங்களையும் தி.மு.க.,வினர் விட்டு வைக்கவில்லை'
"புளிய மரங்களையும் தி.மு.க.,வினர் விட்டு வைக்கவில்லை'
ADDED : ஆக 26, 2011 10:00 PM

சென்னை : ''முந்தைய ஆட்சியில், புளிய மரங்களைக் கூட தி.மு.க.,வினர் விட்டு வைக்கவில்லை; அதையும் டெண்டர் விட்டு கமிஷன் பார்த்தனர்,'' என்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், பாலகிருஷ்ணன் பேசியதாவது: உலக ஊழல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு, முந்தைய ஆட்சியினர் ஊழல் செய்தனர். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் அவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது. அதில், நெடுஞ்சாலைகளில் இருந்த புளிய மரங்கள் கூட தப்பவில்லை. புளிய மரங்களை வெட்டுவதற்கு டெண்டர் விட்டு, அதிலும் கமிஷன் பார்த்தனர். ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கலைவாணர் அரங்கம் கட்டவும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு விடுதி கட்டவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பழனிச்சாமி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், மத்திய அரசின் கீழ் வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரவில்லை.
பாலகிருஷ்ணன்: மாநிலம் முழுவதும் உள்ள 39 ஆயிரம் ஏரிகளை, ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டு வந்து, அவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகள் பாதுகாப்பிற்கு, அரசு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று கருதுகிறேன்.
பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம்: மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இந்த ஆட்சியில் தற்போது மணல் கடத்தல் நடைபெறவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


