வீட்டு வசதி வாரிய இடங்கள் யாருக்கு ஒதுக்கீடு? : கருணாநிதி
வீட்டு வசதி வாரிய இடங்கள் யாருக்கு ஒதுக்கீடு? : கருணாநிதி
வீட்டு வசதி வாரிய இடங்கள் யாருக்கு ஒதுக்கீடு? : கருணாநிதி
UPDATED : ஆக 29, 2011 02:24 AM
ADDED : ஆக 27, 2011 11:44 PM

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில், தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வீடு வழங்கினோம்.
அ.தி.மு.க., ஆட்சியிலோ, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு வீடுகளை ஒதுக்கியுள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நேற்று, அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை: அரசு ஒதுக்கீட்டில், என் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு, வீடுகளை ஒதுக்கியதாக புகார் சொல்கின்றனர். தி.மு.க., ஆட்சியில், சாதாரண நிலையில் பணியாற்றும் ஓட்டுநர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு வழங்கினோம். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்களின் மனைவி, எம்.பி.,யின் மனைவி, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போன்றோருக்கு, வீடுகளை ஒதுக்கியுள்ளனர். அரசு ஒதுக்கீட்டில் முறைகேடு என்று சொல்லப்பட்டதும், விருப்ப உரிமை ஒதுக்கீட்டை ரத்து செய்தோம். இச்சூழலில், தி.மு.க., ஆட்சியில், அரசு ஒத்துக்கீட்டில் முறைகேடு என்று கூறுவது, அவர்கள் ஆட்சியின் முறைகேட்டை மூடி மறைக்கும் செயல். மத்திய அரசு, மாநில அரசு கேட்டதை விட, கூடுதலாக நிதியை ஒதுக்குகிறது என்று கூறிய முதல்வர் தான், மாநில அரசு கேட்டாலும், கொடுக்காத மத்திய அரசு என, முரண்பாடாகப் பேசுகிறார்.
சட்டசபை விவாதங்களின் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தூங்கி வழிகின்றனர். முதல்வர் உரையாற்றும்போதும், இப்படித் தான் இருக்கின்றனர். மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களிடையே, அரசை பாராட்டிப் பேசுவதில் போட்டி நிலவுகிறது. இதை, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ஒருவரே, தி.மு.க., எம்.எல்.ஏ.,விடம் கூறியுள்ளார். அதனால், அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசும் நிலையில் உள்ளனர். எதிர்க்கட்சியினரை விளக்கம் கேட்க விடாமல் தடுக்கும் வகையில், 110வது விதியின் கீழ், சட்டசபையில் அறிக்கை வாசித்து, பாராட்டுரைகளை முதல்வர் பெற்றுக் கொள்கிறார். இவ்வாறு, அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.


