Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டத்தை திருவள்ளூர் வழியாக மாற்றி அமைக்க வேண்டும்

ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டத்தை திருவள்ளூர் வழியாக மாற்றி அமைக்க வேண்டும்

ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டத்தை திருவள்ளூர் வழியாக மாற்றி அமைக்க வேண்டும்

ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டத்தை திருவள்ளூர் வழியாக மாற்றி அமைக்க வேண்டும்

ADDED : செப் 03, 2011 11:05 PM


Google News

திருவள்ளூர் : ஆவடி வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி, திருவள்ளூர் வழியாக அமைக்க வேண்டும்.

இதனால், திட்ட மதிப்பீட்டு செலவு குறைவதோடு, திட்டமும் எளிதில் நிறைவேற்ற முடியும் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னையை அடுத்த, ஸ்ரீபெரும்புதூரில் பல பன்னாட்டுத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்வதற்கு, ரயில் பாதை அமைக்க வேண்டும் என, தொழில் நிறுவனங்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. மேலும், முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளதால், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவும் ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ரூ.800 கோடி செலவு: இக்கோரிக்கைகளை ஏற்று, ரயில்வே நிர்வாகம் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, பூந்தமல்லி வழியாக 800 கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்காக, நிலங்கள் கையகப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை பணிகள் துவங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை எவ்வித பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய ரயில்வே இணையமைச்சர் முனியப்பா, அண்மையில் ஆவடி வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார். இதற்கிடையே, ஆவடி, பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு பாதை அமைப்பதை விட, திருவள்ளூர் வழியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, திருவள்ளூரில் உள்ள மண்டல ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பாஸ்கர் கூறியதாவது: ''ஸ்ரீபெரும்புதூருக்கு ஆவடி வழியாக ரயில் பாதை அமைப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. உதாரணமாக, ஆவடி, பூந்தமல்லி ஊர்கள் ஏற்கனவே வளர்ச்சியடைந்து விட்டது. அங்கு நிலத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. அங்கு ரயில் பாதை அமைக்க போதிய இடம் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும், அதை வாங்க பெரும் தொகையை செலவழிக்க வேண்டும். மேலும், இவ்வழித் தடத்தில், 28 கி.மீ., தூரத்துக்கு பாதை அமைக்க வேண்டும். அதற்கு பதிலாக, திருவள்ளூரில் இருந்து செங்காடு - மண்ணூர் கூட்டுரோடு வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு இடையே 18 கி.மீ., தூரம்தான் உள்ளது. அப்படி அமைக்கும் பட்சத்தில், அங்கிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தையும் இணைக்கும் திட்டம் உள்ளது. அப்படி இணைத்தால், சென்னை கடற்கரை - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரம் - எழும்பூர் - சென்னை கடற்கரை என சுற்று வட்ட ரயில் போக்குவரத்தை இயக்க முடியும்.'' இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, பெயர் கூற விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, ''இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. தொடங்கும் பட்சத்தில், அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளும் கேட்டு செயல்படுத்தப்படும்,'' என்றார். செலவு மிச்சம்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூருக்கு இடையே ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. அவற்றின் மதிப்பும் குறைவு. இதனால், ரயில்வே நிர்வாகத்துக்கு செலவு மிச்சமாவதோடு, நிலம் கையகப்படுத்துவதும் எளிது. எனவே, திட்டத்தை விரைவாக செயல்படுத்தி முடிக்க முடியும் என பயணிகளும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us