Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி கமிஷனர் நியமனம்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி கமிஷனர் நியமனம்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி கமிஷனர் நியமனம்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி கமிஷனர் நியமனம்

ADDED : செப் 03, 2011 11:26 PM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி கமிஷனரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் கமிஷனரிடம் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் சார்பிலும் இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. திமுக சார்பில் வரும் 5ம் தேதியில் இருந்து விருப்பமனுக்கள் பெறப்படுகிறது. தேமுதிக சார்பில் இன்று மனுக்கள் பெறப்படுகிறது. இதே போல் காங்கிரஸ் கட்சியை தவிர பிற கட்சிகள் வேட்புமனுக்கள் பெறுவதற்கு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் முக்கிய பதவியாக மேயர் பதவி கருதப்படுகிறது. இதனால் இந்த பதவியை பெறுவதற்கு தான் முக்கிய அரசியல் கட்சிகள் கடும் போட்டி போடும் என்று கூறப்படுகிறது. இதனால் மேயர் பதவியை குறி வைத்து முக்கிய அரசியல் கட்சிகள் களம் இறங்கும் நிலை உள்ளது. இந்த முறை தேர்தல் அறிவித்த நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் தேர்தல் நடக்க உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்குள் கூட்டணி உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். அதன் பிறகு வேட்புமனு தாக்கல், பரிசீலனை, இறுதி பட்டியல் போன்றவற்றில் பத்து நாட்கள் கடந்து விடும். அதன் பிறகு பிரசாரம் என்றால் 15 நாட்கள் தான் செய்ய முடியும் என்கிற அளவிற்கு மாநில தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி போட்டிருப்பதாக கூறப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றின் பதவிகளை பிடிப்பதற்கு தான் அரசியல் கட்சிகள் கடும் முஸ்தீபு காட்டும் என்று கூறப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வரும் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக (ரிட்டனிங் ஆபிசர்) மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனேகமாக மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மாநகராட்சி கமிஷனரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே போல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு போட்டியிடுபவர்கள் நான்கு மண்டலங்களில் வேட்புமனு பெறும் வகையில் ஏற்பாடு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், இளநிலை பொறியாளர் சரவணன், பிரின்ஸ், நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் ஆகியோரிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் நான்கு மண்டலத்திலும் ஒவ்வொருவர் ஒரு மண்டலத்தில் வேட்புமனுக்கள் பெறுவார்கள் என்று மாநகராட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. தூத்துக்குடி புதிய மாநகராட்சி கட்டடத்தில் மேயர் பதவிக்கும், ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்படும். பழைய மாநகராட்சி கட்டடத்தில் ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு வேட்புமனு பெறப்படும். முத்தையாபுரம் பஞ்சாயத்து அலுவலகக்தில் ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கும், சங்கரப்பேரி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 60 வார்டுகளில் ஒரு மண்டலத்திற்கு தலா 15 வார்டுகள் இடம் பெறும் என்பதால் நான்கு அதிகாரிகளிடம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் வகையில் தற்போது நடவடிக்கையில் துவங்கியிருப்பதாகவும், எனினும் தேர்தல் ஆணையத்தில் இருந்து இதில் ஏதாவது கடைசி நேர சேஞ்ச் வந்தாலும் அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யும் வகையிலும் பணிகள் தயார் நிலையில் வைக்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us