
'டேய்...
சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினத்தையொட்டி, மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமியும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையாவும், சாக்குப் பையுடன் வந்து, மாணவர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து, மெரீனா கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்தனர். அப்போது, வேடிக்கை பார்த்த ஒருவர், 'ஆசியாவிலேயே இரண்டாவது அழகான நீண்ட கடற்கரையான மெரீனாவை, தனியார் கடைக்காரர்கள் கண்ட, கண்ட இடங்களை ஆக்கிரமித்து, தினசரி அசுத்தப்படுத்துவது மட்டுமின்றி, கடற்கரை அழகையும் சிதைத்து வருகின்றனர். இதைத் தடுக்காம, இப்படி அமைச்சர்கள் ஒரு நாள் ஓடிவந்து சுத்தம் செஞ்சா, கடற்கரை சுத்தமாயிடுமாக்கும்...' என்று எதார்த்தமாக கேட்டார். உடனே, சுத்தம் செய்யும் பணியில் இருந்த மாணவன் ஒருவன்,'மத்த அமைச்சர்கள் மாதிரி சின்னையா இல்லை... கார்ல போகும் போது கடற்கரையில குப்பைகளை பார்த்துட்டா, நிச்சயமா சுத்தம் செய்ய இறங்கிடுவாரு'ன்னு சொன்னதும், அங்கிருந்த சக மாணவர்கள், 'டேய்... கூடவே ஒரு வில்லன் டா...' என, 'கமென்ட்' அடித்ததும் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.
'நடக்கும்... ஆனா நடக்காது...!'
கீதா பவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய, மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது. இதை, சமூக நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். அப்போது, 'அரசு மற்றும் தனியார் துறைகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்துவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். திருமண உதவித்தொகை கேட்கும் எல்லா மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார். இதைக் கேட்ட மாற்றுத் திறனாளி ஒருவர், 'அரசு சுயம்வரம் நடத்த முயற்சிக்கும்கிறாங்க... இவங்கள நம்பி இருந்தா கல்யாணம் நடக்குமா...?' என்று கேட்க, மற்றொரு மாற்றுத் திறனாளி, 'நடக்கும்..., ஆனா, நடக்காது...' என்று, 'கமென்ட்' அடித்து விட்டுச் சென்றார்.


