ADDED : செப் 07, 2011 02:28 AM
மன்னார்குடி: கூத்தாநல்லூர் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகரமன்ற தலைவர் யாஸ்மின் பர்வின் தலைமையில் நடந்தது. கமிஷனர் நாராயணன், பொறியாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து (தி.மு.க.,): நான்காவது வார்டில் மக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் இடையூறாக அரசு மதுபானக்கடை உள்ளது. அதை உடனடியாக அகற்ற வேண்டும். கமிஷனர் நாராயணன்; எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அ.தி.மு.க., முகமதுபருதீன்: நகர்முழுவதும் சுகாதார வசதியில்லை, தெரு விளக்குகள் எரிவதில்லை. கமிஷனர் நாராயணன்: இன்னும் 10 நாட்களில் சரிசெய்யப்படும். சுயேட்சை அப்துல்மாலிக்: மின்சாரப்பணிகளை சரியாக செய்யாத போது அவரது டெண்டர் உரிமையை ரத்து செய்யலாமே?
கமிஷனர்: குறுகிய நாட்களே இருப்பதால் ரத்துசெய்ய வேண்டியதில்லை. லோன் வாங்கியாவது விரைவில் புதிய மின்விளக்கு பொருத்தப்படும். அ.தி.மு.க., முகமது பருதீன்: மக்கள் வரிப்பணத்திலேயே செய்யலாமே? கமிஷனர்: செய்யலாம். ஆனால், மக்கள் யாரும் வரிப்பணம் செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் வரிப்பணத்தை செலுத்துவதற்கான உதவியை செய்யுங்கள். அ.தி.மு.க., பாத்திமா: 2010லிருந்து கூறி வருகிறேன். சாக்கடைகள் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும். ஆதலால், உடனடியாக மேற்கொள்ள வேண்டும் அல்லது போட் ஒன்றை வாங்கிக் கொடுங்கள். கமிஷனர்: விரைவில் சரி செய்யப்படும். அ.தி.மு.க., ஜெயராஜ்: 5வது வார்டில் தொடக்கப்பள்ளி முதல் உயர் கல்வி வரை கல்வி நிறுவனங்கள் இருப்பதால் அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை மாற்ற வேண்டும்.
கமிஷனர்: கட்டிடம் இடிப்பதற்கான உத்தரவு வந்துள்ளது. அதனால் இடித்துவிடுவோம். அ.தி.மு.க., அப்துல்ஹமீது: 23வது வார்டில் உள்ள குளம் தூர்வாரப்பட வேண்டும். கமிஷனர்: விரைவில் ஆரம்பிக்கப்படும். அ.தி.மு.க., பாத்திமா: உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அனைவரும் கூடியுள்ளோம். மக்களுக்காக ஆற்றும் உங்கள் பணிகள் சிறக்க மீண்டும் அனைவரும் வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன்.
காங்கிரஸ் சமீது: கூத்தாநல்லூர் நகராட்சியை தாலுக்காவாக அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். உதவி சேர்மன் தி.மு.க., காதர்உசேன்: தீர்மானம் நிறைவேற்றப்படும். கமிஷனர் நாராயணன்: உறுப்பினர்களின் குறைகளைப் போக்க பாடுபடுவேன். அதே நேரத்தில் என்னை எந்த நேரத்திலும் அனைவரும் சந்திக்கலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.


