Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பஸ் டிப்போ இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்காததால் பயணிகள் அவதி

பஸ் டிப்போ இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்காததால் பயணிகள் அவதி

பஸ் டிப்போ இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்காததால் பயணிகள் அவதி

பஸ் டிப்போ இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்காததால் பயணிகள் அவதி

ADDED : செப் 07, 2011 02:29 AM


Google News

பள்ளிப்பட்டு : அரசு பஸ் டிப்போ துவங்கி ஓராண்டாகியும், முழுவீச்சில் செயல்படாததால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அவதி, தொடர்கதையாக உள்ளது.பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையில், அரசு பஸ் டிப்போ (விழுப்புரம் கோட்டம்) இயங்குகிறது.

இதை, 2010ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி போக்குவரத்துத் துறை முன்னார் அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.இந்த டிப்போ, பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும் துவக்கப்பட்டது. இந்த பஸ் டிப்போ தற்போது, முழு அளவில் செயல்படாமல் பெயரளவில் தான் உள்ளது. டவுன் பஸ்கள் ஆறு, ரூட் பஸ்கள் நான்கு என, மொத்தம் 10 பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதை இயக்க கண்டக்டர், டிரைவர்கள் 26 பேர் உள்ளனர்.

அரசு விதிப்படி, தொழிலாளர்கள் இருந்தும் பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. இதனால் பஸ்களில், புளி மூட்டைகளை அடுக்கிச் செல்வது போல, பயணிகள் படிகளில் தொங்கியபடி செல்கின்றனர். மேலும் பழைய பஸ்கள் என்பதால், டயர் பஞ்சராகி நடுவழியில் நின்று விடுகிறது. டிப்போவில் டீசல் டேங்க் இதுவரை பொருத்தப்படவில்லை. கண்டக்டர்கள் பணம் கட்டுவதற்குத் தேவையான கம்ப்யூட்டர் இல்லை. கண்டக்டர், டிரைவர்கள் ஓய்வு அறை இல்லை. இதனால், பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள டைம் கீப்பர் அறை தான் டிப்போவாக செயல்படுகிறது.பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்கள் மற்றும் கண்டக்டர்கள் பயன்படுத்தும் வே- பில், டி.ஆர்., ஆகியவற்றில், திருத்தணி பணிமனை என்று தான் அச்சிடப்பட்டுள்ளது. இதனால், பொதட்டூர்பேட்டையில் பஸ் டிப்போ இருக்கிறதா, இல்லையா என்று, மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.இது குறித்து பொதட்டூர்பேட்டை பஸ் டிப்போ மேனேஜர் ரவீந்திரநாத்திடம் கேட்ட போது, 'திருவள்ளூர் மண்டலத்தில் இது ஆறாவது டிப்போவாக உள்ளது.

தீயணைப்பு, வனத்துறை, வி.ஏ.ஓ., போன்ற துறையினரிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற்ற பிறகு, இரண்டு டீசல் டேங்க் பொருத்தப்படும்.இதற்கான தொகை, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. பின்னர் படிப்படியாக திருப்பதி, திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட புதிய வழித்தடங்களில், 15 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்,'' என்றார்.



எம்.டி.கணபதி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us