Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது

ADDED : செப் 09, 2011 11:07 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், மூன்றாண்டு இடைவெளிக்குப் பின், இன்று டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கிறது.

பார்லிமென்டின் இரு சபைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள், ஆறு தேசிய கட்சிகளின் தலைவர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட 147 பேர், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றனர். இக்கவுன்சிலை 1962ம் ஆண்டு, ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். இக்கவுன்சிலின் கடைசி கூட்டம், 2008 அக்டோபர் 13ம் தேதி நடந்தது.



அப்போது, உள்துறை அமைச்சராக இருந்தவர் சிவராஜ் பாட்டீல். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனிப்பது, மத்திய உள்துறை அமைச்சர் தான். தற்போது, டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் இக்கூட்டம் நடப்பதால், இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.



கடந்தாண்டு ஏப்ரலில், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் மாற்றியமைக்கப்பட்டது. மாநில கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதி (தி.மு.க.,), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்) உட்பட 15 கட்சிகளின் தலைவர்கள், கவுன்சிலில் இடம் பெற்றனர். வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வரிசையில், ரத்தன் டாடா, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இன்று நடக்கும், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின் நடக்கும் முதல் கூட்டம். இந்தக் கூட்டத்தில், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் இளைஞர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அப்பாவி மக்கள் நடத்தும் போராட்டங்களால் ஏற்படும் நிலைமையை மாநில அரசுகள் மற்றும் போலீசார் கையாள வேண்டியது உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின், தேசிய அளவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us