காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் : தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் : தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் : தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
ADDED : செப் 15, 2011 11:43 PM

புதுடில்லி: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா, முதன் முறையாக, காங்கிரசின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் நேற்று பங்கேற்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அமெரிக்காவில் கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் தங்கியிருந்த அவர், சிகிச்சை முடிந்து, கடந்த 8ம் தேதி நாடு திரும்பினார். இருப்பினும், பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்து வந்தார். அடுத்த ஆண்டு, உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரசின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. சிகிச்சைக்கு பின், முதன் முறையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். உ.பி., சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து, மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், 98 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில், தேர்தலில் போட்டியிடும், 70 வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி கூறுகையில், ''காங்கிரஸ் தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பின், கட்சி தொடர்பான பணிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளார். முதன் முறையாக, தேர்தல் கமிட்டி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக, கூட்டம் துவங்குவதற்கு முன், பிரதமர் மன்மோகன் சிங் அவரை வரவேற்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், சோனியா முழுவதும் பங்கேற்றார்,'' என்றார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி, சோனியாவின் அரசியல் செயலர்கள் அகமது படேல் மற்றும் திவேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


