Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பர்கூர் தொகுதியில் பா.ம.க.,வின் பரிதாபம்:போட்டியிட ஆள் இல்லாமல் திணறல்

பர்கூர் தொகுதியில் பா.ம.க.,வின் பரிதாபம்:போட்டியிட ஆள் இல்லாமல் திணறல்

பர்கூர் தொகுதியில் பா.ம.க.,வின் பரிதாபம்:போட்டியிட ஆள் இல்லாமல் திணறல்

பர்கூர் தொகுதியில் பா.ம.க.,வின் பரிதாபம்:போட்டியிட ஆள் இல்லாமல் திணறல்

ADDED : அக் 03, 2011 11:20 PM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி: உள்ளாட்சித் தேர்தலில், பர்கூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட ஆள் இல்லாத பரிதாப நிலைக்கு, பா.ம.க., தள்ளப்பட்டுள்ளது. இதே போல், பர்கூர் தொகுதி முழுவதும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு, பா.ம.க.,வினர் போட்டியிடவில்லை.கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், பா.ம.க.,வுக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளதாகக் கூறி, தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., கடந்த சட்டசபைத் தேர்தலில், பர்கூர் தொகுதியை அடம் பிடித்து வாங்கியது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாவை, பர்கூர் தொகுதி பா.ம.க., வேட்பாளராக நிறுத்தி, தேர்தலில் தோல்வியடைந்தது.உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., தனித்துப் போட்டியிடுகிறது. பா.ம.க.,வுக்கு செல்வாக்கு உள்ளதாகக் கூறிய பர்கூர் தொகுதியில், பெரும்பாலான உள்ளாட்சிப் பதவிகளுக்கு, பா.ம.க.,வினர் போட்டியிடவில்லை. மாவட்ட நிர்வாகிகள், எவ்வளவோ எடுத்துக் கூறியும், 'தேர்தலில் நின்று நாங்கள் அவமானப்பட விரும்பவில்லை' என்று கூறி, பா.ம.க.,வினர் ஒதுங்கிக் கொண்டனர்.பர்கூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு, பா.ம.க.,சார்பில் ஒருவரை போட்டியிட வைக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டனர். பர்கூர் நகரில், ஒரு வார்டில் கூட கிளை துவங்காத பா.ம.க., சார்பில், தேர்தலில் நிற்க யாரும் முன்வரவில்லை.பெயரளவுக்காவது பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுமாறு, மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களைக் கெஞ்சியுள்ளனர். செலவுக்குப் பணம் கொடுத்து விடுவதாகவும், மாவட்ட நிர்வாகிகள் கூறியும், தேர்தலில் போட்டியிட பா.ம.க.,வினர் முன் வரவில்லை.இதே போல், பர்கூர் சட்டசபைத் தொகுதியில், 30 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தல் நடக்கிறது.

பா.ம.க.,வுக்கு செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படும், அரசம்பட்டி, போச்சம்பள்ளி, வேலம்பட்டி ஆகிய பகுதிகளில் மட்டும், ஒரு சில வார்டுகளில் பா.ம.க.,வினர் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பெரும்பாலான வார்டுகளில், பா.ம.க.,வினர் போட்டியிடவில்லை.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, பா.ம.க., மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, பா.ம.க., வினர் விருப்ப மனுக்களே அளிக்கவில்லை. பெயரளவுக்கு விருப்ப மனுக்கள் வாங்கியதாகக் கூறி, தேடிப் பிடித்து ஒரு சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

சட்டசபைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் முயற்சி செய்தும், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு கட்சித் தலைமை வாய்ப்பளித்ததால், கிருஷ்ணகிரி மாவட்ட பா.ம.க.,வினர் அதிருப்திடைந்து, பெயரளவுக்கு மட்டுமே தேர்தல் வேலை பார்த்தோம். அதனால், உள்ளாட்சித் தேர்தலில் பர்கூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட, ஒரு பா.ம.க.,வினர் கூட முன்வரவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us