PUBLISHED ON : அக் 06, 2011 12:00 AM

நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்!
உழைக்கும் மகளிர் சங்கம் மூலம் பல பெண்களை முன்னேற்றியுள்ள ஜெயா அருணாசலம்: காஞ்சிபுரத்தில் தான் பிறந்து வளர்ந்தேன்.
என் குடும்பத்தைச் சார்ந்த பலரும் அரசியலில் இருந்தனர். ஆனால், எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. ஆனாலும், போகப் போக அதன் மேல் தனி ஈர்ப்பு வர ஆரம்பித்தது. முக்கியமாக, பெண்கள் தொடர்பான பிரச்னைகளுக்காக ஓட ஆரம்பித்தேன். வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பெண்கள் யோசிக்கும் எழுபதுகளில், நான் ஆரம்பித்த இந்த 'உழைக்கும் மகளிர் சங்கம்' மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. பலரின் விமர்சனங்கள், கோபங்கள், சவால்கள் என்று, அனைத்தையும் கடந்தே, இன்று அதை, ஒரு வெற்றி முகமாக மாற்றி இருக்கிறேன். வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் உழைத்துப் பிழைக்கும் பெண்களுக்கானது தான் இந்தச் சங்கம். சென்னை, திண்டுக்கல், வேலூர், தர்மபுரி உட்பட, 14 நகரங்களில் சிறுதொழில் செய்து வரும் பெண்களை அணுகி, சங்கத்தில் உறுப்பினர்களாக்குவோம். அவர்களுக்கு, 'இந்தியன் கோ-ஆபரேடிவ் நெட் ஒர்க் பார் விமன்' எனும் கூட்டுறவுச் சங்கம் மூலம், லோன் பெற்றுத் தருவோம். கடன் தொகை, 50 ஆயிரம் ரூபாய் வரை தரப்படும். வங்கிகள் போல், இங்கு ஜாமின் கையெழுத்து தேவையில்லை.சாதாரண காய்கறிக் கடை முதல், மீன் பிடிப்பது, ஒயர் கூடை, பெட்டிக் கடை என, பலதரப்பட்ட தொழில்களுக்கு கடன் பெறுகின்றனர். வெறும், 80 ரூபாயில் ஆரம்பித்து, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றவர்கள் வரை உள்ளனர். அனைவரும், வாங்கிய கடனை சீராக திருப்பிச் செலுத்துகின்றனர். உழைப்பாளியாக சங்கத்தில் உறுப்பினராகி, கடன் பெற்று தொழில் நடத்தி, இன்று முதலாளியாக உயர்ந்திருக்கும் பெண்கள் அநேகம் பேர் உள்ளனர்.


