
புதுடில்லி:' பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது:பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த மசோதா விவகாரம் குறித்து, பார்லிமென்ட் நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது. நிலைக்குழுவின் அறிக்கை தகுந்த நேரத்தில் கிடைத்தால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இருந்தாலும், ஒருவரின் கழுத்தில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, ஒரு காரியத்தை செய்யும்படி மிரட்டுவது சரியல்ல.இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாக, நேற்று (நேற்று முன்தினம்) அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் பன்சால், இந்த பேட்டியை அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


