கருப்பட்டியில் நகை அடகு கடையில் 118 பவுன் கொள்ளை
கருப்பட்டியில் நகை அடகு கடையில் 118 பவுன் கொள்ளை
கருப்பட்டியில் நகை அடகு கடையில் 118 பவுன் கொள்ளை
ADDED : அக் 07, 2011 09:10 PM

கருப்பட்டி : மதுரை மாவட்டம் கருப்பட்டியில் அன்னப்பூரணி லட்சுமி நகை அடகு கடையில் 118 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தவுட்டுராஜன், 60. இவர் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை 6 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு, தவுட்டுராஜனின் சகோதரர் பொன்னுச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். பொன்னுச்சாமி பார்த்த போது கடையின் கிரில்கேட், உட்புற கதவுகள் உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சோழவந்தான் போலீசில் அவர் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீசார் சம்பவயிடத்தில் விசாரித்தனர். 118 பவுன் நகைகள், 5 ஆயிரத்து 359 கிராம் வெள்ளி நகைகள், ரொக்கம் ரூ.25ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது. மதுரையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை பிடிக்க ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


