ADDED : அக் 08, 2011 12:28 AM
அவிநாசி : சேவூர் அருகே ஒட்டர்பாளையத்தில் மர்ம நபர்களால், மின் டிரான்ஸ்பார்மர் பழுதானது; இதுகுறித்து கேட்ட மின் ஊழியர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர்.
இதையறிந்த பிற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சேவூர் அருகே வடுகபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் ஏ.டி., காலனியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. கடந்த 5ம் தேதி, அதில் 'பியூஸ்' போயுள்ளது. அங்கிருந்த நான்கு பேர், பிரதான இணைப்பை துண்டித்து விட்டு, டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்தனர். மீண்டும் இணைப்பு கொடுத்த போது, டிரான்ஸ்பார்மர் புகைந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.திடீரென்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்த மின் ஊழியர் முருகேசன், ஒட்டர்பாளையம் சென்று கேட்டுள்ளார். அங்கிருந்த வேலுசாமி, அவரது மகன் ரங்கசாமி உட்பட நான்கு பேர், முருகேசனிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் முருகேசன் திரும்பிச்சென்று விட்டார். இந்நிலையில், சேவூர் போலீசில், முருகேசன் மீது வேலுசாமி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். அதன்படி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.மின்வாரிய டிரான்ஸ்பார்மரை சேதப்படுத்திய நபர்கள், மின்வாரிய ஊழியர் மீதே புகார் கொடுத்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள், அவிநாசி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நேற்று திரண்டனர். 'ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். முருகேசன் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து,' செயற்பொறியாளர் பொன்மூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர்.மின்வாரிய அதிகாரிகள், ஒட்டர்பாளையம் சென்று பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வடுகபாளையம் துணை மின் நிலைய உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், சேவூர் போலீசில் நேற்று மாலை புகார் அளித்தார். அதில், 'ஒட்டர்பாளையம் டிரான்ஸ்பார்மரை செயலிழக்கச் செய்து, ரூ.70 யிரம் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.


