Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

ADDED : அக் 08, 2011 12:43 AM


Google News

கோவை : 'கோவை மாநகரில், 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற, அனைத்துக்கட்சிகளின் மேயர் வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்தனர்.இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் பிரஸ் கிளப் சார்பில், கோவை மேயர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் கலந்துரையாடல், நேற்று நடந்தது.தொழில் வர்த்தக சபை தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார்.

செயலாளர் நந்தகுமார் வேட்பாளர்களை கவுரவித்தார். கோவையின் தேவை பற்றி, துணைத் தலைவர் பாலசுந்தரம் விளக்கிப்பேசினார். இக்கூட்டத்தில் மேயர் வேட்பாளர்கள் பேசியதாவது:

ம.தி.மு.க., வேட்பாளர் அர்ஜூனராஜ், நான் மேயர் ஆனால், மாநகராட்சி கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்வேன். மாநகராட்சிக்கு என்ன சொத்து இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி முழுமையாக கணக்கெடுக்க ஏற்பாடு செய்வேன். 'இ-பைலிங்' திட்டம் மூலம், நேரில் வராமலேயே சான்றிதழ்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்வேன். எந்த விண்ணப்பம் கொடுத்தாலும், ஒப்புகைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பேன். 24 மணி நேரமும் தண்ணீர் வினியோகம் செய்யவும், ஊழல் இல்லாத நிர்வாகம் கொண்டு வரவும் முயற்சிப்பேன்

என்றார்.



மார்க்.கம்யூ., வேட்பாளர் சிவஞானம்:சென்னையை போல, கோவையிலும் பெருநகர வளர்ச்சிக்குழுமம் அமைக்க ஏற்பாடு செய்வேன். கோவை மாஸ்டர் பிளானை திருத்தி வெளியிடவும், விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்கவும் பாடுபடுவேன்.''சாலை நெரிசலை குறைக்க, மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், மோனோ ரயில் திட்டம், ரிங் ரோடு அமைக்க நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்துவேன். நீர்நிலைகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான மாற்று வீடு ஏற்பாடு செய்வேன் என்றார்.



காங்கிரஸ் வேட்பாளர் சின்னையன் :மத்திய அரசிடம் இருந்து மாநகராட்சிக்கு போதிய நிதியை பெறவும், திட்டங்களை நிறைவேற்றவும் முயற்சிப்பேன். குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன். தவறு செய்ய மாட்டேன் என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் புஷ்பானந்தன்:மாநகராட்சியில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்வேன். சான்றிதழ் பெற வருவோரை, அலைய விடாமல் ஒரே நாளில் கிடைக்க ஏற்பாடு செய்வேன். தெருநாய் தொல்லையை ஒழிப்பேன் என்றார்.



பா.ம.க., வேட்பாளர் ராஜேந்திரன்: நான் வெற்றி பெற்றால், மேயர் பங்களாவுக்கு குடிபோக மாட்டேன். ஏனெனில் அந்த பங்களா ராசியே இல்லை. ஸ்கூட்டரில் தான் மாநகராட்சிக்கு போவேன். டாஸ்மாக் கடைகளே இல்லாமல் செய்து விடுவேன் என்றார்.



லோக்சத்தா கட்சி வேட்பாளர் விஜய் ஆனந்த்:நான் மேயர் ஆனால், நகர வளர்ச்சிக்கு திட்டமிடுதலில் கோவை மக்களை ஈடுபடுத்துவேன். கோவை நகரில் இருக்கும் தொண்டு நிறுவனங்களையும், பொது நல அமைப்புகளையும் கொண்ட கண்காணிப்புக்குழு அமைத்து, திட்டங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்வேன் என்றார்.



தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் பேசியதாவது:மக்கள் என்னை சுலபமாக சந்திக்க முடியும். நிர்வாகம், ஊழலற்றதாக, லஞ்சம் இல்லாததாக இருக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். வரி, குடிநீர் இணைப்பு, வரி பெயர் மாற்றம், சான்றிதழ் பெறுதல் போன்ற பிரச்னைகளுக்காக அலையும் மக்கள் நலன் கருதி, 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்ற திட்டத்தை செயல்படுத்துவேன். வாரம் ஒரு மண்டலம் வீதம் முகாம் நடத்தி, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பேன். கோவையில் இணையாக, கட்டமைப்பு வசதிகள் செய்வேன். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுப்பேன். குடிநீர் தினமும் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.



அ.தி.மு.க., சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வேலுச்சாமி பேசியதாவது:முந்தைய ஆட்சியில், பில்லூர் குடிநீர் திட்டப்பணிகளை ஆறாக பிரித்து தனியாரிடம் ஒப்படைத்ததன் விளைவு, இன்னும் பணி முடியவில்லை. பாதாள சாக்கடை திட்டப்பணியும் அரைகுறையாக நடந்து கொண்டிருக்கிறது.நான் வெற்றி பெற்றால், இந்த முறைகேடு பற்றி நிச்சயம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்வேன். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். திட்டச்சாலைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

திருப்பூரில் அமைத்தது போன்று, பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒன்றும் கோவையில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நீர்நிலைகளில் வசிப்போருக்கு, தரமான, வசதியான வீடுகளை கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்வேன். நாட்டிலேயே மிகுந்த வளமான, வசதியான நகராக, முன் மாதிரியான நகராக கோவையை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us