/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வருவாய் அதிகரிக்க வணிக வரித்துறை அதிரடி ஒரே ஆண்டில் 1,000 கோடி ரூபாய் வசூலிக்க திட்டம்வருவாய் அதிகரிக்க வணிக வரித்துறை அதிரடி ஒரே ஆண்டில் 1,000 கோடி ரூபாய் வசூலிக்க திட்டம்
வருவாய் அதிகரிக்க வணிக வரித்துறை அதிரடி ஒரே ஆண்டில் 1,000 கோடி ரூபாய் வசூலிக்க திட்டம்
வருவாய் அதிகரிக்க வணிக வரித்துறை அதிரடி ஒரே ஆண்டில் 1,000 கோடி ரூபாய் வசூலிக்க திட்டம்
வருவாய் அதிகரிக்க வணிக வரித்துறை அதிரடி ஒரே ஆண்டில் 1,000 கோடி ரூபாய் வசூலிக்க திட்டம்
ADDED : அக் 08, 2011 12:45 AM
வணிக வரித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் மூலம், இந்த ஆண்டில் மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.தமிழக அரசின் கடன் சுமை, 1.25 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றுவிட்டது.
வருவாயை பெருக்குவதன் மூலம் தான், கடன் சுமையைக் குறைக்க முடியும். வருவாயை பெருக்குவதற்கு, மூன்று முக்கிய ஆதாரங்களைத் தான் தமிழக அரசு நம்பி இருக்கிறது.முதலாவது டாஸ்மாக், அடுத்தது வணிக வரிகள், மூன்றாவது பத்திரப் பதிவு. இதில், வணிக வரித்துறை மூலம் வருவாயை அதிகரிக்கும் பணிகளை, அ.தி.மு.க., அரசு முடுக்கிவிட்டுள்ளது. முதல் கட்டமாக, 4 சதவீதம், 12 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்கள் மீதான வரி, 5 சதவீதமாகவும், 14 சதவீதமாகவும், 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இதன் மூலமாகவே, ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.அடுத்ததாக, 'டி.டி.எச்.,' சேவைக்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இவற்றுக்கு தமிழகத்தில், 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், குஜராத், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வரி விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை முன்னுதாரணமாகப் பயன்படுத்தி, தமிழக அரசும் அவற்றை வரி வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது.'டி.டி.எச்.,' சேவைக்கு, 30 சதவீதமும், ஐ.பி.எல்.,க்கு, 25 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. 'டி.டி.எச்.,' சேவையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் முனையில் இல்லாமல், சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாயில், 30 சதவீதம் வரியாக வசூலிக்கப்படும். இதேபோல, ஐ.பி.எல்., போட்டிகளின் டிக்கெட் கட்டணத்தில், 25 சதவீதம், அரசுக்கு வரியாக வசூலிக்கப்படும்.இவ்விரு வரி வருவாய் இனங்களும் தமிழகத்துக்குப் புதியது என்பதால், உத்தரவாதமான வருவாய் எவ்வளவு இருக்கும் என மதிப்பிட முடியவில்லை. ஆனால், வணிக வரித்துறை நடத்திய ஆய்வு மூலம், இவற்றிலிருந்து, 120 கோடி ரூபாய் வரை, ஆண்டு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்துக்குள் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளது.வரி வசூலை அதிகரிக்கும் மூன்றாவது வழிமுறையாக, வணிக வரித்துறைக்கு, முன்னெப்போதும் இல்லாத, மிகப் பெரிய சுதந்திரத்தை இப்போதைய தமிழக அரசு அளித்துள்ளது.பிற துறைகளைப் போலவே, வரி செலுத்த மறுக்கும் வணிக நிறுவனங்களின் சொத்துக்களை இத்துறையினர், 'ஜப்தி' செய்வது வழக்கம். ஆனால், அவற்றை அவர்கள் ஏலம் விடுவது தான் பெரும் சிக்கல். காரணம், ஏலம் தொடர்பாக, பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதற்கான அதிகாரமும், நிதியும் வணிக வரித்துறைக்கு வழங்கப்படவில்லை.இதனால், சொத்து ஏலம் விடப்படும் விவரமே பொதுமக்களுக்குத் தெரியவராது. சொத்து உரிமையாளருக்கும், அதிகாரிக்கும் மட்டும் தான் தெரியும். இது தொடர்பான அறிவிக்கை, சம்பந்தப்பட்ட வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட சொத்து உள்ள தாலுகா அலுவலகத்திலும் மட்டும் தான் ஒட்டப்படும். இதனால், ஜப்தி செய்யப்பட்ட நிலங்களின் மூலம், நிலுவை வரியை மீட்க முடியாத நிலையே நீடித்தது.வங்கிகளுக்கும், வருவாய்த் துறையினருக்கும் இந்த அதிகாரம் உள்ளது. இதே அதிகாரம் தங்களுக்கும் வேண்டும் என, வணிக வரித்துறையினர் நீண்ட நாட்களாக அரசுக்கு எழுதி வந்தனர். அதை ஏற்றுக்கொண்ட தற்போதைய தமிழக அரசு, முதல் முறையாக, வணிக வரித்துறையினர் ஜப்தி செய்த சொத்துக்களை ஏலம் விடுவது பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடுவதற்காக, 1 கோடியே, 13 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை விளம்பரங்கள் வெளியிடுவதற்காக இத்தொகை பயன்படுத்தப்படும். இத்தகைய விளம்பரம் வெளியிடும் அதிகாரம், வணிக வரித்துறையின் இணை ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு நிலவரப்படி, வணிக வரித் துறையினரால் ஜப்தி செய்யப்பட்டுள்ள வழக்குகள், 901. நிலம், வீடு, அலுவலகம், பொருட்கள் என, ஜப்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, கடந்தாண்டு நிலவரப்படி, 1,200 கோடி.நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பதன் மூலம், பொதுமக்கள் மட்டுமின்றி, ஏலதாரர்களும், தரகர்களும், ரியல் எஸ்டேட் துறையினரும் பெருமளவில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டுமே, குறைந்தபட்சம், 800 கோடி ரூபாய் அளவுக்காவது வரி நிலுவையை வசூலித்துவிட முடியும் என, தமிழக அரசு நம்புகிறது.
நமது சிறப்பு நிருபர்


