/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்காளர்களுக்கு வழங்க 2, 32,000 பூத் சிலிப்கள் வந்தாச்சுதூத்துக்குடி மாநகராட்சியில் வாக்காளர்களுக்கு வழங்க 2, 32,000 பூத் சிலிப்கள் வந்தாச்சு
தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்காளர்களுக்கு வழங்க 2, 32,000 பூத் சிலிப்கள் வந்தாச்சு
தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்காளர்களுக்கு வழங்க 2, 32,000 பூத் சிலிப்கள் வந்தாச்சு
தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்காளர்களுக்கு வழங்க 2, 32,000 பூத் சிலிப்கள் வந்தாச்சு
ADDED : அக் 08, 2011 01:48 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு (பூத் சிலிப்) வழங்குவதற்கு சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வந்துள்ளது.
வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இவை வாக்காளர்கள் கையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.கடந்த சட்டசபை தேர்தலை போலவே உள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுமார் 11 லட்சத்திற்கு மேல் பூத் சிலிப்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்திற்கு மேல் பூத்சிலிப்கள் அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தன. இந்த சீட்டுகள் அனைத்தும் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்கள் கையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. நேற்று பூத் சிலிப் வந்தவுடன் தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் உதவி தேர்தல் அதிகாரிகள் இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், நகரமைப்பு அலுவலர் (பொ) ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் திருமால்சாமி மற்றும் தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ஞானசேகரன் ஆகியோர் அதனை ஆய்வு செய்தனர். தேர்தலுக்கு முன்பாக மூன்று நாட்களுக்கு முன்பாக வாக்காளர்கள் கையில் பூத்சிலிப் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பூத் சிலிப்பில் இடம் பெற்றுள்ள விபரம் வருமாறு; தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி சீட்டு, தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சி, வார்டு நம்பர், பாகம் எண், வரிசை எண், வாக்காளரின் பெயர், ஆணா, பெண்ணா, முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்குப்பதிவு தேதி, கிழமை மற்றும் நேரம், வாக்குச்சாவடி எண் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த வாக்குச்சீட்டை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை உட்பட 17 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். இருப்பினும் தற்போது புதிய முறையாக பூத்சிலிப் கொடுக்கப்படுவதால் பாகம் எண் உள்ளிட்டவை இருப்பதால் விரைவாக வாக்காளர்கள் ஓட்டு அளிப்பதற்கும், ஏஜென்ட்கள் வாக்காளர் பட்டியலில் விரைவாக சரிபார்ப்பதற்கும் வசதியாக இருக்கும். இதன் மூலம் ஓட்டுப்பதிவு விரைவாக நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சம்பந்தமாக மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் அவர்களுக்கு தேர்தல் சம்பந்தமாக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. மொத்தம் 15 மண்டல அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.


