எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஆள்மாறாட்டம்:புதுச்சேரி கல்வி அமைச்சர் மீது வழக்கு பதிவு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஆள்மாறாட்டம்:புதுச்சேரி கல்வி அமைச்சர் மீது வழக்கு பதிவு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஆள்மாறாட்டம்:புதுச்சேரி கல்வி அமைச்சர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 09, 2011 01:46 AM
திண்டிவனம்:ஆள் மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வு எழுதிய, புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் உட்பட மூன்று பேர் மீது, விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டிவனம் ஜெயபுரம் தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், கடந்த மாதம் 29ம் தேதி அறிவியல் தேர்வு நடந்தது. இதில், அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு பதில் வேறு ஒருவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. மறு நாள் (30ம் தேதி) நடந்த சமூக அறிவியல் தேர்வை, கல்யாணசுந்தரம் எழுதவில்லை.
ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக எழுந்த புகார் தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரிகள், விசாரணை நடத்தி, விடைத்தாளை கைப்பற்றினர். கல்யாணசுந்தரத்தின் உண்மையான கையெழுத்தோடு ஒப்பிட்டு பார்த்தனர். இதில் அமைச்சருக்கு பதில், ஆள் மாறாட்டம் செய்து வேறு ஒருவர் தேர்வு எழுதியது தெரிந்தது.கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டிவனம் டவுன் போலீசில் சி.இ.ஓ., குப்புசாமி நேற்று புகார் கொடுத்தார்.விழுப்புரம் எஸ்.பி., மாவட்ட குற்றப்பிரிவு மூலம் வழக்கு பதிய உத்தரவிட்டார்.புகார் தொடர்பாக, கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர் ஆதவன், திண்டிவனம் டி.இ.ஓ., அலுவலக தேர்வு பிரிவு உதவியாளர் ரஜினிகாந்த் மீது, ஆள் மாறாட்டம், மோசடி உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


