Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தினமலரை சுட்டிக்காட்டி போனஸ் பேச்சுவார்த்தை

தினமலரை சுட்டிக்காட்டி போனஸ் பேச்சுவார்த்தை

தினமலரை சுட்டிக்காட்டி போனஸ் பேச்சுவார்த்தை

தினமலரை சுட்டிக்காட்டி போனஸ் பேச்சுவார்த்தை

ADDED : அக் 12, 2011 02:35 AM


Google News
'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி, தமிழக மின் துறை அலுவலகத்தில், தொழிலாளர் சங்கங்களுடன் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மின் துறையை சீர்படுத்த உழைப்பதாக, மின் துறை ஊழியர்கள் உறுதியளித்தனர்.தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இந்த ஆண்டு போனஸ் கொடுப்பது தொடர்பாக பேச்சு நடத்துமாறு, வாரியத் தலைவருக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக மின் வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் நேற்று, அனைத்து தொழிற்சங்கங்களுடன், போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.மின் வாரிய மேலாண் இயக்குனர் முருகன், நிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால், பணியாளர் நிர்வாக தலைமை பொறியாளர் லியாகத் அலிகான், சட்ட ஆலோசகர் அருணகிரி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடந்தது. தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்கிரஸ் கட்சிகளின் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட்சங்கங்கள், ஜனதா தொழிலாளர் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட 15 சங்கங்கள் இதில் பங்கேற்றன. பெரும்பாலான சங்கத்தினர், 'கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய 20 சதவீத போனசையே, இந்த ஆண்டிலும் தந்தால் போதுமானது' என தெரிவித்தனர். மின் வாரியத்தின் தற்போதைய நிலவரத்தை, மின் வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா தொழிற்சங்கத்தினரிடம் விளக்கினார். அப்போது, பல்வேறு சங்க நிர்வாகிகளும், 'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை பாராட்டியும், சுட்டிக்காட்டியும் பேசினர்.'தினமலர்' நாளிதழில், கடந்த 8ம் தேதி, 'ரூ.53 ஆயிரம் கோடி கடனை தீர்க்க ஊழியர்களுக்கு 40 கட்டளைகள்' என்ற செய்தி வெளியானது. இந்த செய்தியை, சங்க நிர்வாகிகள் சுட்டிக்காட்டி, 'அந்த கட்டளைகளை பின்பற்றி, மின் வாரியத்திற்காக உழைக்கத் தயார்' என, மின் வாரிய சேர்மனிடம் உறுதி அளித்தனர்.தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்க பொதுச் செயலர் செல்வராஜ், பாரதிய மஸ்தூர் யூனியன் தலைமை நிலைய செயலர் சந்திரன் உள்ளிட்டோர், 'தினமலர்' செய்தியைப் பாராட்டி, 'அந்த செய்தியில் கூறப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி, வாரியத்தை முன்னேற்றுவோம்' என பேசினர்.இதையடுத்து, மின் வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசும் போது,'மின் வாரியத்தை முன்னேற்ற பாடுபடுங்கள்; உங்களுக்குத் தேவையான சலுகைகளை வாரியம் செய்யும். உங்கள் கோரிக்கைகளை முதல்வரிடமும், அமைச்சரிடமும் தெரிவித்து, தீபாவளிப் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே போனசை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.இந்த பேச்சுவார்த்தை திருப்தி அளித்ததாக, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நமது சிறப்பு நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us