PUBLISHED ON : அக் 13, 2011 12:00 AM
அனல் மின்நிலையத்திலும் பிரச்னை
அணுமின் நிலையம் பாதிப்பு ஏற்படுத்தும் என கூடங்குளம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெகுண்டு எழுகின்றனர். அணுமின் நிலையம் மட்டுமின்றி, அனல் மின்நிலையங்களாலும் அதிகளவில் சுற்றுச் சூழல் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்ற வாதம் எழுந்து உள்ளது. தமிழக மின்வாரியமும், தேசிய அனல் மின்கழகமும் இணைந்து ஆயிரத்து 600 மெகா வாட் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையத்தை ஏற்படுத்த உள்ளன. அணுமின் நிலையம் மட்டுமின்றி, அனல் மின்நிலையமும் கடலோர மக்களைப் பாதிக்கிறது. கடல் உள்ளே அமைக்கப்பட்ட குழாய்களில் சிக்கி, மீனவர்களின் மீன் வலைகள் கிழிகின்றன. சூடேற்றப்பட்ட நீர் மறுபடியும் கடலில் வந்து கலப்பதால், கடல்நீர் திடீரென சூடேறுகிறது. இதனால் கடலில் உள்ள உயிர் வளங்கள் பாதிக்கப் படுகின்றன. கடலின் உணவுச் சங்கிலியில் சிதைவுகள் ஏற்படுகின்றன. கடல் அரிப்பும் அதிகமாகிறது.
தகவல் சுரங்கம்
மேயர்களின் வரலாறு
மேயர்களின் வரலாறு
'மெய்யர்' என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு, 'சிறந்தவர்' என்பது பொருளாகும். இதற்கு 'முதன்மையானவர்' என்று மற்றொரு அர்த்தமும் உள்ளது. இந்தச் சொல் தான் பின்னர் மேயர் என மருவியது. பாகிஸ்தானில் மேயர் பதவியை, உருது மொழிச் சொல்லான நஜீம் என்ற பெயரில் அழைக் கின்றனர். ஆசிய நாடுகளை விட, ஐரோப்பிய நாடுகளில் தான் மேயர் பதவிகள் அதிக அதிகாரத்துடன் உள்ளன. அமெரிக்காவில் அதிபரே என்றாலும், அந்த நகரில் நடைபெறும் விழாவில் மேயருக்குத் தான் முதலிடம் தரப்படும். இந்தியாவில் மேயர்களின் அங்கியும், செங்கோலும், அணியும் அரசு ஆபரணமும் பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் பதிவுகளாகும். பிரிட்டிஷ்காரர்கள் மேயர்களாக இருந்த போது, தங்களுக்கு உதவி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஊழியர்களுக்கு சீருடையை சுதேச மன்னர்களின் உடையைப் போன்று வடிவமைத்தனர். அந்த உடை நடைமுறை மேயர்களுடன் கூட வரும் டவாலிகளுக்கு இன்றும் தொடர்கிறது.


